/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இன்ஸ்பெக்டர் மீது வழக்கு தொடர கோரிக்கை விளக்கம் கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்
/
இன்ஸ்பெக்டர் மீது வழக்கு தொடர கோரிக்கை விளக்கம் கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்
இன்ஸ்பெக்டர் மீது வழக்கு தொடர கோரிக்கை விளக்கம் கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்
இன்ஸ்பெக்டர் மீது வழக்கு தொடர கோரிக்கை விளக்கம் கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்
ADDED : மார் 05, 2026 05:18 AM
பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மூன்றாவது குற்றவாளியை பார்க்க வந்த அவரது வக்கீலை, போலீஸ் நிலையத்துக்குள் நுழைய அனுமதி மறுத்ததற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று காமாட்சிபாளையா இன்ஸ்பெக்டர் கிரிஷ் நாயக்கிற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு 57வது கூடுதல் நகர சிவில் நீதிமன்றத்தில், சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நான்காவது குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்ட பவன், மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், 'இவ்வழக்கில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கிய காமாட்சிபாளையா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரிஷ் நாயக் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு, நீதிபதி நாயக் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நடந்த விவாதம்:
அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார்: குற்றத்தில் ஈடுபட்டால் மட்டுமே, விசாரணை அதிகாரியை குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 319ன் கீழ், குற்றம் சாட்டப்பட்டவராக ஆக்க முடியும். இவ்வழக்கில், எந்த அடிப்படையில் விசாரணை அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும் என்கிறீர்கள்?
கடந்த 2024 ஜூன் 11ம் தேதி அதிகாலை 1:00 மணிக்கு விசாரணையின் போது, கைப்பற்றப்பட்ட எட்டு மொபைல் போன்களும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடையது. அவை சோதனை செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அந்த மொபைல் போனில் இருந்து டிஜிட்டல் சான்றுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. ஊடகங்களில் விளம்பரம் பெறுவதற்காக மட்டுமே இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இம்மனுவை அங்கீகரிக்க கூடாது.
மனுதாரர் பவன் தரப்பு வக்கீல் சுதன்வா: காமாட்சிபாளையா போலீஸ் நிலையத்தில் மனுதாரர் பவனை பார்க்க சென்ற என்னை அனுமதிக்காதது ஏன்?
அரசு வக்கீல்: போலீஸ் நிலையங்களில் போக்சோ, பாலியல் பலாத்காரம் போன்ற மிகவும் நுட்பமான வழக்கு குற்றவாளிகள் அங்கு உள்ளனர். இந்த சூழ்நிலையில், வக்கீல்கள் குழுவினரை எப்படி போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்க முடியும்?
நீதிபதி நாகபிரசன்னா: மனுதாரர் பவன் வழக்கில், போலி ஆதாரங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக கிடைத்த தகவல் தொடர்பாக விசாரிக்க வந்த அவரது வக்கீலை, போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்க மறுத்தது ஏன் என்பதை காமாட்சிபாளையா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும். மார்ச் 9ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நடிகர் தர்ஷன் தரப்பு வக்கீல்: மனுதாரர் மீதான வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும்.
நீதி பதி: மனுதாரர் வழக்கை தினமும் விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்றமும், விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று தான் கூறி உள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் 977 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இவர்களின் வழக்கு விசாரணையை விடுத்து, உங்கள் மனுதாரரின் வழக்கு விசாரணையை மட்டும் தினமும் நடத்த வேண்டுமா. இவ்வழக்கு தொடர்பான விசாரணை, தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்து வருகிறது. அதே தொடரட்டும். தினமும் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது.
இவ்வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால், கூட்டம் கூடிவிடும். எனவே, இவர்களின் விசாரணையை, கானொலி மூலம் மட்டுமே நடத்த வேண்டும்.
அரசு வக்கீல்: சிறையில் குடும்பத்தினரை சந்திக்க, தர்ஷன் அனுமதி கேட்டு மனு செய்துள்ளார். இது தொடர்பாக, சிறை அதிகாரிகளிடம், அவர் விண்ணப்பிக்கவே இல்லை.
சிறை விதிகளின்படி, முதலில் சிறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும். இதை அதிகாரிகள் ரத்து செய்தால் மட்டுமே, நீதிமன்றத்தில் முறையிட முடியும். சிறு சிறு விஷயங்களுக்காக, தொடர்ந்து மனுக்களை தாக்கல் செய்து, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறார். எனவே, அவ ரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

