/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
/
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை
ADDED : ஜூன் 06, 2025 11:30 PM
பெங்களூரு: கூட்ட நெரிசலில் சிக்கி ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்த வழக்கில், கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் உட்பட 3 பேரை கைது செய்ய தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் கையில், கடந்த 4 ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அன்றைய தினம் மாலையில், மைதானத்திற்கு முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் கிரிஷ் அளித்த புகாரில், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தினர், ஆர்.சி.பி., நிர்வாகம், டி.என்.ஏ., என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் மீது கப்பன் பார்க் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
அரசு தான்
இந்நிலையில் தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சங்க தலைவர் ரகுராம் பட், செயலர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் நேற்று ரிட் மனுத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், 'ஆர்.சி.பி., அணியின் வெற்றியை கொண்டாட அழைப்பு விடுத்தது அரசு தான். விதான் சவுதா படிக்கட்டில் வைத்து ஆர்.சி.பி., வீரர்களை பாராட்டியது முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் தான். மைதானத்தின் கேட் முன் நின்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது எங்கள் பொறுப்பு இல்லை. மைதானம் மட்டும் எங்கள் கட்டுப்பாட்டில் வருகிறது.
பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது ஆர்.சி.பி., நிர்வாகம். பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீசார். பாதுகாப்பு குறைபாட்டால் ரசிகர்கள் இறந்ததால் தான் போலீஸ் கமிஷனர் உட்பட 5 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
அழுத்தத்தின் கீழ் எங்கள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. முதல்வர் உத்தரவு இருப்பதால் கண்மூடித்தனமாக எங்களை கைது செய்ய வாய்ப்பு உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க நாங்கள் தயார்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார்.
முன்ஜாமின்
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் அசோக் ஹரகனஹள்ளி, ஷியாம் சுந்தர் வாதிடுகையில், ''ஆர்.சி.பி., ரசிகர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தினரை கைது செய்ய முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். இது கிரிக்கெட் சங்கத்தினர் உரிமைகளுக்கு தீங்கு விளைவிக்கும். புகார் கொடுத்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்,'' என்றார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, சிறப்பு அரசு வக்கீல்கள் பெல்லியப்பா, ஜெகதீஷ் வாதிடுகையில், ''சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணையுடன், நீதி விசாரணைக்கும் அரசு உத்தரவிட்டு உள்ளது. தேவையில்லாமல் யாரும் கைது செய்யப்பட மாட்டார்கள். இந்த மனு தொடர்பாக ஆட்சேபனை மனுத் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். மனுதாரர்களுக்கு கைது பயம் இருந்தால், முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்யலாம்,'' என்றனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், '' மனுதாரர்கள் இந்த சம்பவத்தில் தங்களுக்கு பங்கு இல்லை என்று கூறி பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விட்டு வெளியேற வேண்டாம். மனுதாரர்களை போலீஸ் கைது செய்ய கூடாது,'' என்று கூறினார். மனு மீதான அடுத்த விசாரணையை 16ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.