ADDED : ஆக 18, 2026 02:45 AM

- நமது நிருபர் -:
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட்டின் கம்பாளிபுரா கிராமத்தில் பசுமையால் சூழப்பட்ட இடத்தில் ஸ்ரீ காட்டேரம்மா கோவில் அமைந்துள்ளது.
உள்ளூர் நாட்டுப்புற கதைகளின்படி, பல நுாற்றாண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ஆழ்ந்த பக்தி கொண்ட காட்டேரி என்ற பெண் வாழ்ந்து வந்தார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்.
அவருக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் சமூகத்தினர் அவரை அவமதித்து ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்த அவமானத்தை தாங்க முடியாத அவர், கிராமத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள காட்டிற்குள் மறைந்து போனார்.
சிறிது காலத்துக்கு பின், அப்பகுதியில் இருந்த மரத்தின் அருகில் கால்நடைகள் மேய்த்து கொண்டிருந்த சில கிராம மக்கள், மரத்தின் அருகில் தெய்வீக ஒளியையும், அசாதாரணமான ஆன்மிக அனுபவங்களையும் உணர துவங்கினர்.
ஒரு நாள், ஒளி வந்த இடத்தில் தேவியின் சிலையை கண்டெடுத்தனர். காட்டேரியின் தெய்வீக ஆற்றல், ஆதிசக்தியுடன் கலந்து, அப்பகுதி மக்களை காப்பதற்காக காட்டேரம்மா தேவியாக வெளிப் பட்டதாக கூறப்படுகிறது.
பின், கிராமத்தினர் சிறிய கோவில் கட்டி, தேவியை வழிபட துவங்கினர்.
காட்டேரம்மாவின் அருளால் பல அற்புதங்கள், வேண்டுதல் நிறைவேறியதாக ஏராளமான பக்தர்கள் நம்பினர். இன்றும் கூட நிவாரணம் தேடி பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.
கர்நாடக பாரம்பரிய கட்டட முறையில் கோவில் கட்டப்பட்டு உள்ளது.
கோவிலை சுற்றிலும் பெரிய வளாகம் காணப்படுகிறது. கோவில் முன் தீப ஸ்தம்பம், ராஜகோபுரம் காணப்படுகிறது. தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, கருவறையில் காட்டேரம்மா இன்முகத்துடன் பக்தர்களுக்காக காத்திருக்கிறார்.
இங்கு நவராத்திரி மஹோத்சவம், துர்கா அஷ்டமி, விஜயதசமி, ஆண்டு விழா, தீப ஆராதனை, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
