தங்கவயலில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு விருப்பம்
தங்கவயலில் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு விருப்பம்
ADDED : மே 15, 2026 03:42 AM

தங்கவயல்: ''தங்கச் சுரங்கத்தில் பணி செய்த அனைத்து தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவர்களிடையே ஒற்றுமை இல்லாததால், இரண்டு ஆண்டுகள் வீணாகி விட்டது,'' என, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு கூறினார்.
நுாற்றாண்டு பழமை வாய்ந்த தங்கவயல் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தை மூடி, 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதை புதுப்பித்து திறக்க வேண்டும் என்ற தங்கவயல் பாதுகாப்பு ஐக்கிய முன்னணி அமைப்பினரின் கோரிக்கையை, கோலார் ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபு ஏற்று, தங்கச் சுரங்க நிர்வாக அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டார். செடி, கொடிகள், முட் செடிகளை அகற்றவும், மின்விளக்கு இணைப்பை ஏற்படுத்தி, ஒரு மாதத்திற்குள் விளையாட்டு மைதானத்தை தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து, பொதுப் பணித் துறையி ன் பயணியர் விடுதியில் முன்னாள் தொழிலாளர் சங்கங்கள், தங்கவயல் பாதுகாப்பு ஐக்கிய முன்னணி அமைப்பினரின் கோரிக்கைகளை பெற்றார்.
பின், அங்கிருந்தோரிடம், ''நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கருத்தை தெரிவிக்க முன் வர வேண்டும். இது தொடர்பாக முக்கிய தலைவர்களை அழைத்து பேசுவேன். உங்களிடையே ஒற்றுமை இல்லாததால், இரண்டு ஆண்டுகள் வீணாகி விட்டது. சுரங்க வீடுகளை சொந்தம் ஆக்க, நீதிமன்ற சிபாரிசை நிறைவேற்ற வலியுறுத்துவேன்,'' என்றார்.
நகராட்சி முன்னாள் தலைவர் தயானந்தா, வக்கீல் ஜோதிபாசு, தொழிற்சங்கத் தலைவர் கே.ராஜேந்திரன், எஸ்.அன்பரசன், விஜயராகவன், பொன் சந்திரசேகர், தாடி அன்பழகன், கால்பந்தாட்ட வீரர் கருணாமூர்த்தி, பிரதாப் குமார், பெமல் தொழிற்சங்க முன்னாள் பொதுச் செயலர் ஜெயசீலன், வக்கீல் தட்சிணாமூர்த்தி ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
