பெங்., இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
பெங்., இஸ்கான் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
ADDED : செப் 05, 2026 03:35 AM

பெங்களூரு: பெங்களூரில் உள்ள இஸ்கான் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின், 5,253வது ஜெயந்தி நேற்று நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
பெங்களூரில் உள்ள உலக புகழ்பெற்ற இரண்டு இஸ்கான் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். 'ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற மந்திரங்களுடன், ஜென்மாஷ்டமி சிறப்பு ரத்தின அலங்காரத்தில் காட்சி அளித்த ராதா - கிருஷ்ணாவை வணங்கி, பக்தி பரவசம் அடைந்தனர்.
ராஜாஜிநகர் இஸ்கான் கோவிலில், 101 தட்டுகளில் நெய்வேத்தியம் படைக்கப்பட்டு இருந்தது. கனகபுரா ரோடு இஸ்கான் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அபிஷேகங்கள், ஆரத்திகள், சப்பன் போகம், வெண்ணெய் மிஸ்ரி சேவை, புஷ்பாஞ்சலி சேவை, பல்லக்கு ஊர்வலம், ஜூலன் சேவை, கோ பூஜை, கோடி ஜப யாகம், கீதா பாராயணம், பிரபல கலைஞர்களின் நடனம், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் சுலோக பாராயணம் நடந்தன.
பெங்களூரு இஸ்கான் கோவில் தலைவர் ஸ்ரீமது பண்டிட் தாசா கூறுகையில், ''இந்த நன்னாளில் எங்கள் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம். ராதா கிருஷ்ணர் தங்கள் ஆசீர்வாதத்தை ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது பொழிய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்,'' என்றார்.
