தார்வாட் மாவட்டத்துக்குள் நுழைய குல்கர்னிக்கு நிபந்தனையுடன் அனுமதி
தார்வாட் மாவட்டத்துக்குள் நுழைய குல்கர்னிக்கு நிபந்தனையுடன் அனுமதி
ADDED : ஆக 26, 2026 02:57 AM

பெங்களூரு: பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி, தார்வாட்டுக்குள் நுழைய, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்து உள்ளது.
தார்வாட் பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி உட்பட 16 பேருக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இதையடுத்து, எம்.எல்.ஏ., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வினய் குல்கர்னி மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு வழங்கிய ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், ஜாமினும் வழங்கியது.
இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக, தார்வாட் நகருக்குள் நுழைய நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை விலக்க கோரி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணையின் போது, அவர் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:
இவ்வழக்கு விசாரணையின் போது, சாட்சிகள் தார்வாட் நகரில் இருந்தனர். இதனால் தார்வாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இவ்வழக்கு விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனையும் அறிவிக்கப்பட்டது.
இந்த தண்டனையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து , ஜாமினும் வழங்கிவிட்டது. இதில், தார்வாடுக்குள் நுழைய எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. எனவே, மாவட்டத்துக்குள் அவரை நுழைய அனுமதிப்பதால், ஆதாரங்களை அழிப்பார் என்ற கேள்விக்கே இடமில்லை.
மேலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரின் எம்.எல்.ஏ., பதவி ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், மீண்டும் எம்.எல்.ஏ.,வாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அத்துடன், தொகுதி மக்களின் குறைகளை கேட்க வேண்டி உள்ளது. அதிகாரிகளுடன் பிரச்னை குறித்து விவாதித்து, தீர்வு காண வேண்டியது அவசியம். எனவே, அவரை தார்வாட் நகருக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு வாதிட்டார்.
சி.பி.ஐ., தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'இவ்வழக்கின் சாட்சிகள் அனைவரும் தார்வாட் மாவட்டத்தில் வசிக்கின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்றார்.
நீதிமன்றம், 'தார்வாட்டுக்குள் நுழைந்த பின், வழக்கின் சாட்சிகளை தொடர்பு கொள்ளவோ, அச்சுறுத்தவோ அல்லது செல்வாக்கு செலுத்தவோ கூடாது.
'ொது அமைதி, போக்குவரத்து அல்லது மக்கள் வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்க கூடாது. இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், ஜாமின் ரத்து செய்ய கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு வாய்ப்பு வழங்கப்படும்' என கூறி, அனுமதி அளித்தது.
இத்தீர்ப்பு குறித்து, வினய் குல்கர்னி கூறியதாவது:
இத்தனை ஆண்டுகள், தொகுதி மக்கள் என் மீது காட்டிய நம்பிக்கை, ஆதரவுக்கு கடமைபட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
