அமைச்சர் டி.சுதாகருக்கு சிகிச்சை சந்தேகம் எழுப்பும் குமாரசாமி
அமைச்சர் டி.சுதாகருக்கு சிகிச்சை சந்தேகம் எழுப்பும் குமாரசாமி
ADDED : ஏப் 26, 2026 11:53 PM

சித்ரதுர்கா: அமைச்சர் டி.சுதாகருக்கு சிகிச்சை அளிக்கப்படும் விவகாரத்தில், சில விஷயங்கள் மறைக்கப்படுவதாக, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி சந்தேகம் எழுப்பி உள்ளார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சர் டி.சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் போராடி கொண்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அவர் எம்.எல்.ஏ.,வாக உள்ள ஹிரியூர் தொகுதி குறித்து நான் எதுவும் பேச மாட்டேன். ஆனால் மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். சில விஷயங்கள் மறைக்கப்படுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையை தவறாக பயன்படுத்துவதில் சில வல்லுநர்கள் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றி கொள்ளவே, அஹிந்தா எனும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மாநாடுகளை நடத்துகின்றனர். மற்ற நேரங்களில் அஹிந்தா சமூகத்தினரை கைவிடுகின்றனர். நாங்கள் போடும் பிச்சையால் தான், காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று, அஹிந்தா மக்களே சொல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
