/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சங்கடங்களை போக்கும் லட்சுமி நரசிம்மர்
/
சங்கடங்களை போக்கும் லட்சுமி நரசிம்மர்
ADDED : மார் 03, 2026 06:16 AM

- நமது நிருபர் -
பெங்களூரு மாநகரம் பக்தர்களை கவர்ந்திழுக்கும் புராதன கோவில்களுக்கும் பெயர் பெற்றதாகும். இவற்றில், லட்சுமி நரசிம்மர் கோவிலும் ஒன்று.
பெங்களூரு மல்லேஸ்வரத்தின், கோதண்டராமபுராவில் லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. அற்புதமான கட்டடக்கலையை இங்கு காணலாம். விஜயநகர மன்னர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. 200 ஆண்டுகள் பழமையானது என, வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலங்கள், கட்டடங்கள் இடிந்து விழுவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால், நுாற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்ட லட்சுமி நரசிம்மர் கோவில், இப்போதும் அதே பொலிவுடன் இருப்பது ஆச்சர்யமான விஷயமே. அற்புதமான கலைச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மூலஸ்தானத்தில் நரசிம்ம சுவாமி, தன் துணைவியார் லட்சுமி தேவி சமேதராக, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்கோவிலுக்கு பல சிறப்புங்கள் உள்ளன. கடவுளை வெறுக்கும் நாத்திகராக இருந்தாலும், ஒரு முறை இந்த கோவிலில் காலடி வைத்தால், ஆத்திகராக மாறி பக்தியை பற்றி பிரசாரம் செய்ய துவங்குவர். பக்தர்களின் சங்கடங்களை தீர்க்கிறார்.
இதனால், சுற்றுப்பகுதி மக்களுடன், வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள், லட்சுமி நரசிம்மரை தேடி வருகின்றனர்.
கண் திருஷ்டியால் அவதிப்படுவோர், உடல் ஆரோக்கிய பிரச்னை, தீவினைகளால் ஏற்படும் பாதிப்புகள், கிரகங்களால் ஏற்படும் தொந்தரவுகள் உள்ளோர், லட்சுமி நரசிம்மரை தரிசித்தால், பிரச்னைகள் பஞ்சாக பறந்து போகும் என்பது ஐதீகம்.
தம்பதி சமேதராக காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தால், தம்பதியருக்கிடையே உள்ள மனக்கசப்பு மறைந்து ஒற்றுமை, பாசப்பிணைப்பு அதிகரிக்குமாம்.
வாரந்தோறும் செவ்வாய்கிழமையன்று ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடக்கின்றன. அதில், பங்கேற்றால், ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும். மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திர நாளன்று, நரசிம்மருக்கு, 108 லிட்டர் பாலில் அபிஷேகம் நடக்கிறது.
இந்த கோவிலில் ராமநவமி, நரசிம்ம ஜெயந்தி, நவராத்திரி உட்பட, பல்வேறு பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
எப்படி செல்வது?
மல்லேஸ்வரம், பெங்களூரின் மிக முக்கியமான வர்த்தக பகுதி. மக்கள் நெரிசல் அதிகம் உள்ள இடம். யஷ்வந்த்பூரில் இருந்து ஆறு கி.மீ., மெஜஸ்டிக்கில் இருந்து நான்கு கி.மீ., சிவாஜிநகரில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் மல்லேஸ்வரம் உள்ளது.
நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும், மல்லேஸ்வரத்துக்கு பி.எம்.டி.சி., பஸ்கள் இயங்கப்படுகின்றன.
ஆட்டோ, வாடகை கார் வசதியும் உள்ளது. மெட்ரோ ரயில் போக்குவரத்தும் உள்ளது. மல்லேஸ்வரத்தில் இருந்து வாடகை வாகனத்தில் கோதண்டராமபுராவில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலை அடையலாம்.
அருகில் உள்ள கோவில்கள் காடு மல்லேஸ்வரா கோவில், கங்கம்மா கோவில், சாயிபாபா கோவில், யதுகிரி எத்திராஜ மடம், வேணுகோபால சுவாமி கோவில்.

