காங்., 'மாஜ ி ' எம்.எல்.ஏ.,விடம் ரூ.27 கோடி நிலம் பறிப்பு
காங்., 'மாஜ ி ' எம்.எல்.ஏ.,விடம் ரூ.27 கோடி நிலம் பறிப்பு
ADDED : ஜூன் 03, 2026 11:01 PM

பெங்களூரு: விவசாயிகளின் விளை பொருட்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கட்டப்பட்ட ஆலையை குத்தகைக்கு எடுத்து, விதிமுறையை மீறி, ஆயத்த ஆடைகளை சேமித்து வைத்ததால், முன்னாள் எம்.எல்.ஏ., பரூக்கிற்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து, கே.எஸ்.இ.ஏ.பி.சி., எனும் கர்நாடக மாநில வேளாண் விளைபொருள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம் அதிரடியாக மீட்டுள்ளது.
பெங்களூரு கிராமம், சிக்கபல்லாபூர் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக, பூஞ்சேனஹள்ளி அருகில் 4 ஏக்கர் நிலத்தில், 27.50 கோடி ரூபாய் செலவில், விவசாயிகள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, 2024ல் ஆலை கட்டப்பட்டது.
இந்த ஆலையை காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தொழிலதிபருமான பரூக்கிற்கு சொந்தமான, 'பிசா குளோபல் வென்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்' லீசுக்கு எடுத்திருந்தனர்.
அந்த நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில், 'பழங்கள், காய்கறிகளை மட்டுமே பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்ப பயன்படுத்த வேண்டும்' என்று விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நிறுவனமோ, வாழைப்பழங்களை பதப்படுத்தும் பிரிவில், நான்கு லோடு ஆயத்த ஆடைகளை சட்ட விரோதமாக வைத்திருந்தனர்.
அத்துடன், ஆண்டுக்கு, 1.55 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், இதுவரை, 18.29 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது. 2.48 கோடி ரூபாய் நிலுவை உள்ளது.
தகவல் அறிந்த சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரிகள், ஆலையில் மார்ச் மாதம் திடீரென 'ரெய்டு' நடத்தினர். ரெய்டில், அவர்களுக்கு வந்த புகார் உண்மையானது என்பதை உறுதி செய்து, முறையாக பரமாரிக்கப்படவில்லை என்று அரசிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.
அரசும், இதை ஏற்று, ஆலையை கைப்பற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அதிகாரிகளும், 45 நாட்களுக்குள் ஆலையை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்நிறுவனமோ, எந்த பதிலும் அளிக்கவில்லை.
கே.எஸ்.இ.ஏ.பி.சி., எனும் கர்நாடக மாநில வேளாண் விளைபொருள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம், இரண்டு ஆண்டுகளுக்கு பின், ஆலையை அதிரடியாக கைப்பற்றினர்.
கே.எஸ்.இ.ஏ.பி.சி., நிர்வாக இயக்குனர் சிவபிரகாஷ் கூறுகையில், ''இரு மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக கட்டப்பட்ட ஆலையை, ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம், விதிமுறையை மீறியது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, முறைப்படி ஆலையை கைப்பற்றி உள்ளோம். வரும் நாட்களில் விவசாயிகள் பயனடையும் வகையில் வசதி செய்து தரப்படும். இதை முதல்வர் துவக்கி வைப்பார்,'' என்றார்.
