ADDED : மே 03, 2025 11:10 PM

கெங்கேரி: பெங்களூரின் நைஸ் சாலையில் வக்கீல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பெங்களூரின் நைஸ் சாலையின் பன்னர்கட்டா - கனகபுரா வழித்தடத்தில் சாலையோரம் நேற்று முன்தினம் ஒருவர் இறந்து கிடந்தார்.
அவர் உடல் கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்தில் 'இண்டிகேட்டர்' போடப்பட்ட நிலையில் ஒரு காரும் நின்றது.
அந்த வழியாக சென்றவர்கள், கெங்கேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில் உயிரிழந்தவர், மாண்டியாவின் மலவள்ளியை சேர்ந்த ஜெகதீஷ், 52, என்று தெரிய வந்தது. வக்கீல் தொழில் செய்த அவர், கெங்கேரி அருகே உல்லாலில் குடும்பத்துடன் வசித்ததும் தெரியவந்தது.
அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. தாக்கப்பட்டதற்கான அடையாளமும் உடலில் எதுவும் இல்லை. காரின் இருபுறமும் விபத்து நடந்ததற்கு தடங்கள் உள்ளன.
விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்ற கோணங்களில் விசாரணை நடக்கிறது. கெங்கேரி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

