ADDED : ஜூலை 05, 2026 11:30 PM
சாம்ராஜ் நகர்: வீட்டின் முன் அமர்ந்திருந்த பேத்தி, பாட்டியை தாக்கிவிட்டு சிறுத்தை தப்பியோடியது.
சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின் மீன்யம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தட்டிகெரே தொட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சிவம்மா என்ற மூதாட்டி, உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது உணவு தேடி வந்த சிறுத்தை ஒன்று, சிவம்மா மீது பாய்ந்து அவரை தாக்கியது. இவரின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்து 6 வயது பேத்தி ஹர்ஷிதா வெளியே வந்தார்.
ஹர்ஷிதாவை பார்த்த சிறுத்தை, சிவம்மாவை விட்டுவிட்டு ஹர்ஷிதாவின் கழுத்து, மார்பு பகுதியில் தாக்கியது. இருவரின் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் வெளியே வந்தனர்.
சிறுத்தையை பார்த்த அவர்கள், கூச்சல் போட்டனர். இதனால் அச்சமடைந்த சிறுத்தை, மீண்டும் வனப்பகுதிக்குள் ஓடியது. படுகாயம் அடைந்த இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த மலை மஹாதேஸ்வரா வன விலங்கு சரணாலயத்தின் வனத்துறை ஊழியர்கள், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். வீட்டின் முன் அமர்ந்திருந்த இருவரையும் சிறுத்தை தாக்கியதால், கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
