/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் மாவட்டத்தில் பிப்., 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
/
கோலார் மாவட்டத்தில் பிப்., 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
கோலார் மாவட்டத்தில் பிப்., 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
கோலார் மாவட்டத்தில் பிப்., 13 வரை தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : பிப் 03, 2026 06:02 AM
கோலார்: ''தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம் பிப்ரவரி 13ம் தேதி வரை, கோலார் மாவட்டம் முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, கோலார் மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி டாக்டர் ஜி. ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.
கோலார் மாவட்ட தொழுநோய் கட்டுப்பாட்டு திட்ட அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று துவக்கி வைத்து, அவர் பேசியதாவது:
சுகாதாரத்துறை என்பது அரசுக்கு வருவாய் ஈட்டும் துறையல்ல. மாறாக அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் துறை. மக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே நல்ல வாழ்க்கை வாழ முடியும்.
சமூகத்தில் உள்ள அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது சுகாதாரத்துறையின் முக்கிய பணி. அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் முக்கியம். இதற்கு, நமது மருத்துவ துறை மன உறுதியுடன் செயல்பட வேண்டும்.
தொழுநோய் விழிப்புணர்வு பிரசாரம், பிப்ரவரி 13ம் தேதி வரை, கோலார் மாவட்டம் முழுதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதார அதிகாரி ஏ.வி.நாராயணசாமி பேசியதாவது:
தொழுநோயால் யாரும் கவலைப்பட கூடாது. அதன் மீதுள்ள பார்வையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை பேணுவதும், அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிப்பதும் நமது கடமை. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் கிராமப்புறங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது அவசியம். தொழுநோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் எளிதாக குணப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
காச நோய் மற்றும் தோல் நோய் கட்டுப்பாட்டு அதிகாரி பிரசன்ன குமார் பேசியதாவது:
தொழுநோய் குறித்த மக்களின் தவறான கருத்துகளை களைய வேண்டும். 'மைக்கோபாக்டீரியம் லெப்ரே' என்ற நுண்ணுயிரியால் இந்த நோய் ஏற்படுகிறது.
உடலில் எந்த பகுதியிலும் வெளீர், வெள்ளை, செம்பு நிறப் புள்ளிகள் தோன்றுவது கைகள் மற்றும் கால்களின் ஓரங்களில் நரம்புகள் கடினமாக இருப்பது, உணர்வின்மை, நரம்புகளில் வலி, உள்ளங்கைகளில் உணர்வு இழப்பு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும்.
அறிகுறிகள் தோன்றிய உடன் சிகிச்சை பெற வேண்டும். இது சம்பந்தமாக கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபைகள், பள்ளிகள், திருவிழாக்களில் விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இதுகுறித்த தகவலுக்கு '104' என்ற எண்ணில் அழைக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

