ADDED : மே 30, 2026 02:17 AM

- நமது நிருபர் -
மலைப்பகுதிகளில் பலாப்பழ சீசன் என்றால், அங்குள்ள மக்களுக்கு கொண்டாட்டம் தான். மரத்தில் இருந்து வெட்டி வீட்டில் வைத்தால், வீடு முழுதும் கமகமக்கும். இதன் நறுமணத்துக்கு மயங்காதோரே இருக்க முடியாது. பலா பழத்தில் பாயசம், அப்பளம், சிப்ஸ், கொழுக்கட்டை என, பல விதமான உணவுகள் தயாரிப்பர். அதில் சுவையான கேசரி பாத்தும் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l பழுத்த பலாப்பழ சுளைகள் - 10 முதல் 15
l சிரோடி அல்லது பன்சி ரவை - 1கப்
l சர்க்கரை - ஒன்றரை கப்
l நெய் - அரை கப்
l தண்ணீர் - இரண்டு முதல் இரண்டரை கப்
l ஏலக்காய் துாள் - அரை ஸ்பூன்
l முந்திரிப்பருப்பு - ஒரு கைப்பிடி
l உலர்ந்த திராட்சை - 2 ஸ்பூன்
l எல்லோ புட் கலர் - ஒரு சிட்டிகை
செய்முறை
பலாப்பழ சுளைகளை கொட்டை நீக்கி, நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
இதில் பாதியளவு பழத்தை, மிக்சியில் போட்டு மிருதுவாக அரைக்கவும். மற்ற பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பு, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் ரவையை போட்டு, நறுமணம் வரும் வரை வறுத்து, தட்டில் எடுத்து வைக்கவும்.
வாணலியில் மீண்டும் சிறிதளவு நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுது, நறுக்கி வைத்துள்ள துண்டுகளை போடவும். மூன்று நிமிடங்கள் கை விடாமல் கிளறவும். அதன் பின், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
இதில் எல்லோ புட் கலர், விருப்பம் இருந்தால் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும்.
தண்ணீர் கொதிக்கும் போது, ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும். ரவை முற்றிலுமாக வெந்த பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும்.
சர்க்கரை கரைந்தால் கேசரி பாத் மிருதுவாகும்.
பின், மிச்சமுள்ள நெய், ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு நன்றாக கிளறவும். வாணலியை மூடி, இரண்டு நிமிடம் மிதமான தீயில் வைத்திருந்தால், சுவையான பலாப்பழ கேசரி தயார்.
இதை தயாரிக்க 20 நிமிடங்கள் போதும். குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும். திடீரென விருந்தினர் வந்தால், பலாப்பழ கேசரியை செய்து கொடுத்தால், பாராட்டு நிச்சயம்!
