ADDED : மே 30, 2026 02:15 AM

- நமது நிருபர் -: கடையில் வாங்கி வந்த பிரட், மிச்சமாகி காய்ந்து போனால், சாப்பிட முடியாது. குப்பையில் போடவும் மனம் வராது. கவலை வேண்டாம். மீதமான பிரட்டில், சுவையான புலாவ் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
l பிரட் ஸ்லைஸ் - ஆறு முதல் எட்டு
l வெங்காயம் - 1 (பெரியது)
l தக்காளி - 1
l குடமிளகாய் - 1 கப்
l பச்சை பட்டாணி - கால் கப்
l துருவிய கேரட் - 2 ஸ்பூன்
l பச்சை மிளகாய் - 2
l இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
l மஞ்சள் துாள் - கால் ஸ்பூன்
l மிளகாய் துாள் - 1 ஸ்பூன்
l கரம் மசாலா - அரை ஸ்பூன்
l பாவ் பாஜி மசாலா - 1 ஸ்பூன்
l கொத்துமல்லி - 1 கைப்பிடி
l எண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன்
l சீரகம் - அரை ஸ்பூன்
l கறிவேப்பிலை - ஒரு கொத்து
l எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
l உப்பு - தேவையான அளவு
செய்முறை
பிரட் ஸ்லைஸ்களை, சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, பிரட் துண்டுகளை போட்டு மிதமான தீயில், வறுத்து தனியாக வைக்கவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் சீரகம், கறிவேப்பிலை போடவும். அதன் பின், நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட், நீள வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
அதன் பின், நறுக்கிய தக்காளி, குடமிளகாய், கேரட், பட்டாணி சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும். இந்த கலவையில் மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலா, பாவ் பாஜி மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
மசாலா ஒன்று சேர்ந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை, மிதமான தீயில் வைத்திருக்கவும். தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும். அதன் பின், நெய்யில் வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு, உடைந்து விடாமல் நிதானமாக கிளறவும். இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை துாவி, எலுமிச்சை சாற்றை பிழிந்து, அடுப்பில் இருந்து இறக்கவும். சூடாக பரிமாறவும். கிரீன் சட்னி அல்லது தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிடலாம். வீட்டுக்கு திடீர் விருந்தாளி வந்தால், செய்து கொடுக்க ஏற்ற பதார்த்தம்.
விருப்பம் இருந்தால், பிரட் புலாவில் ஸ்வீட் கார்ன், உருளைக்கிழங்கு, காளான், பீன்ஸ் சேர்க்கலாம். பன்னீர் துண்டுகளை சேர்த்தாலும், சுவையாக இருக்கும்!
