பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட செல்வோம் கவிமனே அருங்காட்சியகம்!
பயனுள்ள வகையில் நேரத்தை செலவிட செல்வோம் கவிமனே அருங்காட்சியகம்!
ADDED : மே 28, 2026 03:09 AM

-நமது நிருபர் -:
ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி தாலுகாவில் இருந்து, 16 கி.மீ.,யில் குப்பள்ளி கிராமம் உள்ளது. இங்கு தான் மகாகவி குவேம்புவின் வரலாற்று சிறப்பு மிக்க இல்லம் உள்ளது. இது, 'கவி மனே' என அழைக்கப்படுகிறது. கவிமனே என்பதற்கு, கவிஞரின் வீடு என பொருள்.
இந்த கவிமனேவில் தான், கன்னட மொழியின் மிகச்சிறந்த கவிஞரும், நாடக ஆசிரியருமான குவேம்பு பிறந்து வளர்ந்தார். இவரின் நினைவுகளை போற்றும் வகையில் தற்போது வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளது.
அருங்காட்சியகம் மூன்று மாடிகளை கொண்டது. முதல் தளத்தில், பிரமாண்டமான மரத்துாண்கள், பழங்காலத்து வீட்டு உபயோக பொருட்கள், தானியங்களை சேகரிக்கும் மரப்பெட்டிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
குவேம்புவின் திருமண படங்கள், சமையலறையில் பழைய காலத்து பித் தளை பொருட்கள், செப்பு பாத்திரங்கள், குவேம்பு பயன்படுத்திய ஆடைகள், பேனாக்கள், நாற்காலி, அவரது அரிய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த அருங்காட்சியம், காலை, 9:30 மணி முதல், மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும். நுழைவுக்கட்டணம், 20 ரூபாய். அருங்காட்சியத்தில் வீடியோ, படங்கள் எடுக்க அனுமதி கிடையாது.
குவேம்பு எழுதிய புத்தகங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. அவர் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் சலுகை விலையில் இங்கு கிடைக்கின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் வளாகத்தில் கவிமனே உணவகம் உள்ளது. இங்கு, பில்டர் காபி, உள்ளூர் உணவுகள் போன்றவை கிடைக்கின்றன. இது, நேரத்தை செலவிட ஏற்ற இடமாகவும் உள்ளது.
எப்படி செல்வது? பஸ்: முதலில் ஷிவமொக்கா பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து, பஸ் மூலம் அருங்காட்சியகத்தை அடையலாம்.
ரயில்: முதலில் ஷிவமொக்கா ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் அருங்காட்சியகத்தை அடையலாம்.
