ADDED : ஜூன் 02, 2026 01:13 AM

- நமது நிருபர் -:
கொப்பால் மாவட்டம், குஷ்டகி தாலுகாவின் ஹனுமசாகர் கிராமத்தில் சிறிய மலையில், ஹனுமசாகர் கோட்டை உள்ளது. இந்த கோட்டைக்குள் 400 ஆண்டுகள் பழமையான அபிநவ திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் உள்ளது.
கட்டபுரா என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, ஸ்ரீமந்த திம்மப்பய்யா தேசாய் ஆட்சியின் கீழ் இருந்தது. இவர், வெங்கடேஸ்வரரின் தீவிர பக்தர். ஆண்டுதோறும் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரரை தரிசிக்க, கால்நடையாக சென்று வந்தார்.
ஆனால் வயதான பின், அவரால் நடக்க முடியவில்லை. ஆண்டுதோறும் வெங்கடேஸ்வரரை தரிசித்து வந்த எனக்கு, இனி அவரை தரிசிக்க முடியாதோ என்று வேதனை அடைந்தார்.
அன்றைய தினம் அவரின் கனவில் தோன்றிய வெங்கடேஸ்வரர், 'ஹனுமசாகர் மலையில் உறங்கும் பசுவின் அருகில் என் பாதத்தை காண்பாய். இதை தரிசித்தாலே, திருப்பதியில் என்னை தரிசித்த பலன் கிடைக்கும்' என்று கூறிவிட்டு மறைந்தார்.
மறுநாள் காலை, தன் குடும்பத்தினரிடம் கூறி, கடவுள் கூறிய ஹனுமசாகர் மலைக்கு சென்று பார்த்தபோது, 'பசுவின் அருகில் கால் பாதத்தை கண்டு ஆச்சரியப்பட்டனர். சில நாட்கள் இந்த பாதத்தை தரிசித்து வந்தார்.
அப்போதும், ஸ்ரீமந்த திம்மப்பய்யா தேசாய்க்கு மனம் ஒப்பவில்லை. வெங்கடேஸ்வரரின் முழு வடிவத்தை காண வேண்டும் என்று எண்ணினார். மீண்டும் அவரின் கனவில் தோன்றிய வெங்கடேஸ்வரர், 'குஷ்டகி டவுனில் கலபாவி கிராமத்தில், துணி துவைக்கும் கல்லில் என் உருவம் உள்ளது' என்று கூறினார்.
அதன்படி, ஸ்ரீமந்த திம்மப்பய்யா தேசாயும் அங்கு சென்று அந்த கல்லை மீட்டு வந்தார். மலையில் இக்கல்லை வைத்து, 'அபிநவ திருப்பதி' என்று கோவிலுக்கு பெயர் சூட்டினார்.
அன்று முதல் இக்கோவிலுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோட்டையின் நுழைவாயில் பிரமாண்டாக அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் தெப்பக்குளமும் அமைந்துள்ளது.
