மனைவியை சரமாரியாக வெட்டிய மதுரையை சேர்ந்த கணவர் கைது
மனைவியை சரமாரியாக வெட்டிய மதுரையை சேர்ந்த கணவர் கைது
ADDED : செப் 17, 2026 11:17 PM

ஜே.பி.நகர்: குடும்ப தகராறால் பிரிந்த மனைவியை, சரமாரியாக கத்தியால் வெட்டியதுடன், உடல் மீது திரவம் வீசிய, மதுரை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் வெங்கடேசன், 30. இவருக்கும், மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவின் மதுமிதா, 26, என்பவருக்கும், 'டின்டர்' என்ற மொபைல் போன் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2024ம் ஆண்டு மதுரையில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, குடும்ப தகராறாக மாறியது. கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். பெங்களூரு வந்த மதுமிதா, ஜே.பி.நகர் 3வது பேசில் உள்ள தனியார் மருத்துவமனையில், நர்சாக வேலை செய்தார்.
பைக்கில் வந்தார் பெங்களூரில் ஆயில் நிறுவனத்தில் வேலை செய்த வெங்கடேசனும், சில மாதங்களுக்கு முன் சென்னைக்கு சென்று, அங்கு ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து, தனது பைக்கில் வெங்கடேசன் பெங்களூரு வந்தார்.
நேற்று காலை 9:15 மணிக்கு மதுமிதா வேலை செய்த, தனியார் மருத்துவமனைக்கு பைக்கில் சென்றார். மருத்துவமனை முன் நின்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் காலை உணவு வாங்குவதற்காக, மருத்துவமனையில் இருந்து மதுமிதா வெளியே வந்தார். ஹெல்மெட் அணிந்திருந்த வெங்கடேசன் நேராக மதுமிதா நோக்கி சென்று, அவரை அரிவாளால் வெட்டினார்.
வீடியோ எடுப்பு அதிர்ச்சி அடைந்த மதுமிதா, தன் உயிரை காப்பாற்ற, மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்திற்கு ஓடினார். அவரை துரத்தி சென்ற வெங்கடேசன் சரமாரியாக வெட்டினார். மதுமிதாவின் அலறல் சத்தம் கேட்டு, மருத்துவமனை ஊழியர்கள், அப்பகுதி மக்கள் வந்தனர். நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
அதில் சிலர் மதுமிதாவை காப்பாற்ற முயற்சிக்காமல், அவரை வெட்டுவதை மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர்.
ஒரு சிலர் மட்டும் வெங்கடேசனை நோக்கி கற்களை வீசினர். கோபம் அடைந்த வெங்கடேசன், தன் மீது கற்களை வீசியவர்களையும் தாக்க முயன்றார். மதுமிதா மீது ஏதோ திரவத்தையும் ஊற்றினார். அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, போக்குவரத்து போலீசார் அங்கு வந்து வெங்கடேசனை கைது செய்து, ஜே.பி.நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
4 பிரிவில் வழக்கு உயிருக்கு போராடிய மதுமிதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கைதான வெங்கடேசன் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது.
மதுமிதாவை, வெங்கடேசன் அரிவாளால் வெட்டும் காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மதுமிதாவை கொலை செய்ய, 350 கி.மீ., துாரம் பயணம் செய்து, சென்னையில் இருந்து வெங்கடேசன் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
