முதல்வர் பதவி விவகாரத்தில் தீர்வு அவசியம் மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கருத்து
முதல்வர் பதவி விவகாரத்தில் தீர்வு அவசியம் மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா கருத்து
ADDED : ஏப் 17, 2026 04:59 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில் பதவி பகிர்வு விவகாரம் முடிந்த அத்தியாயம் அல்ல; இந்த விஷயத்தில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்வு காணாவிட்டால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்,'' என, மாகடி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தலைமை மாற்றம் குறித்து, எங்களை போன்றவர்களிடம் கேட்கக்கூடாது. தகுதியான நபர்களிடம் இதை கேட்க வேண்டும். தலைமை மாற்றம் முடிந்த அத்தியாயம் அல்ல. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் தான், இறுதி முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் யாரும் இதைப்பற்றி விளக்கம் அளிக்க முடியாது.
தாவணகெரேவில் முஸ்லிம் தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்ன காரணம் என்பது பற்றி, முழுமையான தகவல் எனக்கு தெரியாது.
கட்சியை விட, யாரும் பெரியவர்கள் அல்ல. கட்சிக்கு எதிராக யார் நடந்தாலும், அது தவறு தான்.
சித்தராமையாவோ, சிவகுமாரோ, ஜமீரோ அல்லது பாலகிருஷ்ணாவோ, கட்சியின் முன்னேற்றத்துக்கு இடையூறு செய்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி மேலிடத்தின் முடிவுக்கு, நாங்கள் தலை வணங்க வேண்டும்.
தாவணகெரேவில் சிறுபான்மையினர் இருக்கும் இடங்களில், நாங்கள் பிரசாரம் செய்யவில்லை. அங்கு சிறுபான்மையினரால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களை குறி வைக்கவில்லை. பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீர்வு காண வேண்டும். குமாரசாமியுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்பில் உள்ளதாக கூறுகின்றனர்.
யார், யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது யாருக்கு தெரியும். ஊடகத்தினரிடம் என்ன தகவல் உள்ளது. காங்கிரசின் எந்த தலைவரும், ம.ஜ.த.,வுடன் தொடர்பில் இல்லை. குமாரசாமி எப்போதும் ஆபர் கொடுப்பார்.
ஆபர்களை வைத்தே கட்சியை நடத்துகிறார். அவரது பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை.
கர்நாடகாவில் பதவி பகிர்வு குறித்த விவாதம், முடிந்த அத்தியாயம் அல்ல. கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தீர்வு காணாவிட்டால், கட்சியின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
