/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் மகேஷ் திம்மரோடி வீட்டில்... 'ரெய்டு!'; சின்னையாவின் மொபைல் போன் சிக்கியதால் அதிர்ச்சி
/
தர்மஸ்தலா வழக்கில் மகேஷ் திம்மரோடி வீட்டில்... 'ரெய்டு!'; சின்னையாவின் மொபைல் போன் சிக்கியதால் அதிர்ச்சி
தர்மஸ்தலா வழக்கில் மகேஷ் திம்மரோடி வீட்டில்... 'ரெய்டு!'; சின்னையாவின் மொபைல் போன் சிக்கியதால் அதிர்ச்சி
தர்மஸ்தலா வழக்கில் மகேஷ் திம்மரோடி வீட்டில்... 'ரெய்டு!'; சின்னையாவின் மொபைல் போன் சிக்கியதால் அதிர்ச்சி
ADDED : ஆக 27, 2025 06:58 AM

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உடல்களை புதைத்ததாக கூறப்படும் புகார் குறித்து எஸ்.ஐ.டி., விசாரித்து வருகிறது. வழக்கின் புகார்தாரரான மாண்டியாவின் சிக்கப்பள்ளி கிராமத்தின் சின்னையா என்பவரை, கடந்த 23ம் தேதி கைது செய்தது. அவரை 10 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
'தர்மஸ்தலாவுக்கு எதிராக அவதுாறு பரப்பும்படி என்னை ஒரு கும்பல் கட்டாயப்படுத்தியது; டில்லிக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுத்தனர். நீதிமன்றத்தில் நான் கொடுத்த மண்டை ஓடு, எலும்புகளையும் அந்த கும்பல் தான் கொடுத்தது; என் மொபைல் போனும் அந்த கும்பலிடம் தான் உள்ளது' என, சின்னையா கூறி இருந்தார். ஆனால் அந்த கும்பல் யார் என்பதை அவர் வெளிப்படையாக காட்டிக் கொடுக்கவில்லை.
நீதிமன்ற அனுமதி ஆனாலும் அவரிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தன்னை பின்னாள் இருந்து இயங்கிய கும்பல் யார் என்பதை தன்னை அறியாமல் அவரே உளறிக் கொட்டினார்.
தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரேயில் வசிக்கும், ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பின் தலைவர் மகேஷ் திம்மரோடி உள்ளிட்ட சிலரது பெயர்களை கூறினார். வழக்கின் சூத்திரதாரி யார் என்பது தெரிந்ததும், எஸ்.ஐ.டி., விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியது.
மகேஷ் திம்மரோடி வீட்டில் சோதனை நடத்த, பெல்தங்கடி நீதிமன்றத்திடம் இருந்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் அனுமதி வாங்கினர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே, மகேஷ் திம்மரோடி வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில், பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்தனர். அவரது வீட்டில் இருந்து 1 கி.மீ., துாரத்திற்கு முன்பே, இரும்பு கம்பிகள் வைத்து தடுப்பு உருவாக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு விசாரணை அதிகாரி ஜிதேந்திர குமார் தயமா தலைமையில், பெல்தங்கடியில் இருந்து உஜ்ரேவுக்கு போலீசார் புறப்பட்டுச் சென்றனர்.
சோகோ டீம் மகேஷ் திம்மரோடி, அவரது சகோதரர் மோகன் திம்மரோடி ஆகியோரது பண்ணை வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. மகேஷ் திம்மரோடி வீட்டின் ஒரு அறையில் 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் சிக்கியது.
அந்த மொபைலில் இருந்த நம்பரை வைத்து விசாரித்தபோது, அந்த மொபைல் சின்னையாவுக்கு உரியது என்பது உறுதி செய்யப்பட்டது.
மகேஷ் திம்மரோடி வீட்டின் ஒரு அறையில், சின்னையா தங்கி இருந்ததற்கான சில ஆதாரங்களையும், தடய அறிவியல் ஆய்வகத்தின் ஒரு பகுதியான, சோகோ எனும் தடயங்களை சேகரிக்கும் பிரிவினர் கைப்பற்றினர். சோதனை இரவு வரை நீடித்தது.
சோதனையின்போது மகேஷ் திம்மரோடி, அவரது சகோதரர் மோகன் திம்மரோடி வீட்டில் இல்லை. சிக்கிய மொபைல் போன், மகேஷ் திம்மரோடி வீட்டின் கண்காணிப்பு கேமராவின், ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தகவல் சேகரிப்பு இதற்கிடையில் கடந்த 2002ம் ஆண்டு தர்மஸ்தலாவுக்கு சென்று, மகள் அனன்யா பட் காணாமல் போனதாக, சுஜாதா பட் என்பவர், தர்மஸ்தலா போலீசில் புகார் செய்தது பற்றியும், எஸ்.ஐ.டி., விசாரித்து வருகிறது.
ஷிவமொக்காவின் ரிப்பன்பேட், உடுப்பியின் பரிகா, குடகின் விராஜ்பேட், பெங்களூரில் சில பகுதிகளில், சுஜாதா பட் குறித்து, எஸ்.ஐ.டி., தகவல் சேகரித்தது.
சுஜாதா பட்டிற்கு, அனன்யா பட் என்ற மகளே இல்லை என்பது தெரிந்தது. போலீசில் பொய் புகார் அளித்தது பற்றி விசாரிக்க, விசாரணைக்கு ஆஜராகும்படி சுஜாதா பட்டிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக கூறி இருந்தார்.
ஆனால், நேற்று அதிகாலை 5:00 மணிக்கே, பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்தில் திடீரென ஆஜரானார். ஜிதேந்திர குமார் தயமா உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், மகேஷ் திம்மரோடி வீட்டிற்கு சோதனை நடந்த சென்றதால், முக்கிய அதிகாரிகள் யாரும் இல்லை.
அதனால், '29ம் தேதியே விசாரணைக்கு ஆஜராகுங்கள்' என, எஸ்.ஐ.டி., குழுவின் எஸ்.ஐ., குணபால், சுஜாதா பட்டிடம் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை. 'எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து விசாரணைக்கு ஆஜராவேன்' என, பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.
எஸ்.ஐ., விசாரணை இதுகுறித்து ஜிதேந்திர குமார் தயமா கவனத்திற்கு, குணபால் கொண்டு சென்றார். சுஜாதா பட்டிடம் விசாரிக்கும்படி குணபாலுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஏழு மணி நேரத்திற்கு பின், மதியம் 12:00 மணிக்கு சுஜாதா பட்டிடம் விசாரணை துவங்கியது.
எஸ்.ஐ., குணபால் விசாரணை நடத்தினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு சுஜாதா பட்டும் பதில் அளித்துள்ளார். விசாரணை முடிந்த பின்னரும் வீட்டிற்கு செல்லாமல், ''மூத்த அதிகாரிகளை சந்தித்துவிட்டுத் தான் செல்வேன்,'' என்று கூறினார். ஆனால் சிறிது நேரம் காத்திருந்த அவர், அதிகாரிகளை சந்திக்காமலேயே புறப்பட்டுச் சென்றார்.
எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரணையின்போது, சின்னையா இன்னொரு அதிர்ச்சி தகவலையும் கூறி இருந்தார்.
அதாவது, 'மகேஷ் திம்மரோடி உள்ளிட்டோர் மடாதிபதி ஒருவரை சந்திக்க என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் அனைவரும் ஒன்றாக எடுத்த புகைப்படம், வீடியோக்கள் மகேஷ் திம்மரோடி வீட்டில் உள்ள மொபைல் போனில் இருக்கின்றன' என, சின்னையா கூறியிருந்தார்.
அந்த மொபைல் போனையும் சோதனையின்போது, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தேடினர். ஆனால் அந்த மொபைல் போன் சிக்கியதா என்பது பற்றி, எந்த தகவலும் வெளியாகவில்லை.
என்.ஐ.ஏ., அவசியமில்லை தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. எதற்காக பா.ஜ.,வினர் என்.ஐ.ஏ., விசாரணை கேட்கின்றனர் என்று தெரியவில்லை. நம் போலீசார் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. வழக்கை என்.ஐ.ஏ.,யிடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பரமேஸ்வர், உள்துறை அமைச்சர்
ஆணின் மண்டை ஓடு
ஆய்வில் தகவல்
பெல்தங்கடி நீதிமன்றத்தில் சின்னையா ரகசிய வாக்குமூலம் அளித்தபோது, ஒரு மண்டை ஓடு, சில எலும்புகளை கொடுத்திருந்தார். பெண்ணின் மண்டை ஓடு என்றும் கூறியிருந்தார். தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கிருந்து அறிக்கை கிடைத்துள்ளது. அந்த மண்டை ஓடு 25 முதல் 30 வயதுக்கு உட்பட்ட, ஆண் மண்டை ஓடு என்பது உறுதியாகி உள்ளது. அந்த மண்டை ஓட்டில் நிறைய மண் இல்லை. ஆனாலும் மண் துகள்கள் இருந்தன. அதை தடய அறிவியல் ஆய்வகத்தினர் சேகரித்து வைத்துள்ளனர். அந்த மண்டை ஓடு எப்படி கிடைத்தது என்பது குறித்து வரும் நாட்களில் சின்னையாவிடம் எஸ்.ஐ.டி., அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
யார் இந்த
மகேஷ்
திம்மரோடி?
ராஷ்ட்ரீய ஹிந்து ஜாகரன வேதிகே அமைப்பு தலைவர் மகேஷ் திம்மரோடிக்கும், தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்துக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. 2012ல் தர்மஸ்தலா பகுதியில் கல்லுாரி மாணவி சவுஜன்யா, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் குடும்பத்தை, மகேஷ் திம்மரோடி தொடர்புப்படுத்தினார். சவுஜன்யா மரணத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக கூறி, 13 ஆண்டுகளாக போராட்டங்களையும் நடத்தி வருகிறார். தர்மஸ்தலா கோவிலை நிர்வகிக்கும் குடும்பம், ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து கோவில் நிர்வாகத்தை எப்படியாவது பறித்து விட வேண்டும் என்ற நோக்கில், மகேஷ் திம்மரோடி உள்ளிட்டோர் செயல்படுவதாக, பெல்தங்கடி மக்க ள் பேசிக் கொள்கின்றனர்.