ADDED : ஆக 04, 2026 02:10 AM

பெங்களூரு: கட்சி தலைமையை மிரட்டி தாவணகெரே வடக்கு எம்.எல்.ஏ., மல்லிகார்ஜுன் அமைச்சர் பதவியை பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் மேலிடம் தயாரித்த, கர்நாடக மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு பட்டியலில் தாவணகெரே வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், லிங்காயத் சமூக தலைவருமான எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனின் பெயர் இடம் பெறவில்லை. இதையறிந்த அவர், பெங்களூரில் நேற்று காலை அமைச்சரவை பட்டியல் குறித்த இறுதி கட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது, தனக்கு கட்டாயம் பதவி வழங்க வேண்டும். அமைச்சர் பதவி வழங்கவில்லையென்றால் தனது எம்.எல்.ஏ., பதவி, தன்னுடைய மகன் சமர்த்தின் எம்.எல்.ஏ., பதவி, தன்னுடைய மனைவி பிரபாவினுடைய லோக்சபா எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்து விடுவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த உத்தர கன்னடா மாவட்டம், பட்கல் தொகுதி எம்.எல்.ஏ., மங்கள் வைத்யாவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டது. இதற்கு மாற்றாக மல்லிகார்ஜுன் பெயர் சேர்க்கப்பட்டது. பின்னர், நேற்று மாலை அவர் அமைச்சராக பதவியேற்றார்.
இதன் மூலம், மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஷாமனுார் சிவசங்கரப்பா மகன் என்பதை மல்லிகார்ஜுன் நிரூபித்து உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
