குப்பையை நான்காக பிரிக்க மாலுார் டவுன் சபை அறிவுரை
குப்பையை நான்காக பிரிக்க மாலுார் டவுன் சபை அறிவுரை
ADDED : ஜூன் 06, 2026 03:45 AM
மாலுார்: ''வீட்டு கழிவுகளை, ஈரக்கழிவுகள், உலர் கழிவுகள், சுகாதாரக்கழிவுகள், சிறப்பு பராமரிப்பு கழிவுகள் என்று தரம் பிரிக்க வேண்டும்,'' என, மாலுார் டவுன் சபை தலைமை அதிகாரி எம்.எஸ்.மகாதேவா தெரிவித்தார்.
டவுன் சபை அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:
மாலுார் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப குப்பையை சேகரித்து, நகரத்தின் துாய்மையை பராமரிப்பு செய்வது டவுன் சபையின் கடமை. வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, நான்கு பகுதிகளாக பிரித்து குப்பை வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும்.
சமையலறை கழிவுகள், காய்கறி, பழத்தோல்கள், விரைவில் கெட்டுப் போகும் பொருட்களை ஈரக்கழிவுகள் பிரிவில் வைக்க வேண்டும். பிளாஸ்டிக், காகிதம், கண்ணாடி, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை, உலர் கழிவுகள் பிரிவில் சேகரிக்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட சானிட்டரி பேடு போன்றவற்றை சுகாதார கழிவுகள் பிரிவில் தனியாக சேகரிக்க வேண்டும். மின்னணு கழிவுகள், பழைய மின்கலங்கள், மருந்து பாட்டில்கள், அபாயகரமான பொருட்களை சிறப்பு கவனம் செலுத்தி தேவைப்படும் கழிவுகளாக கருதி, நான்காவது கூடையில் பிரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, சுகாதார அதிகாரி ஷாலினி, ஆய்வாளர் ராஜண்ணா உடனிருந்தனர்.
