ADDED : மார் 09, 2026 06:15 AM
சோழதேவனஹள்ளி: பெங்களூரின் தரபனஹள்ளியில் வசிப்பவர் சுமலதா, 33. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை விட்டு பிரிந்து வசிக்கிறார். யஷ்வந்த்பூர் மெட்ரோ நிலையத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம், பாண்டு என்ற சந்துரு, 29, என்பவர் அறிமுகமானார். இது கள்ளக்காதலாக மாறியது. பாண்டுவுக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டாக, மஹாலட்சுமி லே - அவுட்டில், வாடகை வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இதற்கிடையே பாண்டுவுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இது குறித்து, சுமலதா கேள்வி எழுப்பியதால, இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. எனவே பாண்டுவை விட்டு பிரிந்து, தன் தாய் வீட்டுக்கு சுமலதா சென்று விட்டார்.
நேற்று முன் தினம், சுமலதாவின் வீட்டுக்கு வந்த பாண்டு, இரு சக்கர வாகனத்தை தரும்படி கேட்டார். அப்போது சுமலதா, இரு சக்கர வாகனம் தன் அக்காவுடையது; தர முடியாது என, மறுத்தார். பாண்டு தகராறு செய்ததால் அவரை சுமலதாவின் தந்தை ஸ்ரீராம், தாய் மஞ்சம்மாவும் திட்டினர்.
இதனால் கோபத்துடன் அங்கிருந்து சென்ற பாண்டு, அரை மணி நேரத்துக்கு பின், பெட்ரோலுடன் மீண்டும் அங்கு வந்தார். சுமலதா மீதும், அவரது பெற்றோர் மீதும் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார். தீக்காயங்களுடன் அலறிய மூவரையும், அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சோழதேவனஹள்ளி போலீசார், பாண்டுவை கைது செய்தனர்.
