/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தோசை கல்லால் மனைவியை அடித்து கொன்றவர் கைது
/
தோசை கல்லால் மனைவியை அடித்து கொன்றவர் கைது
ADDED : ஆக 18, 2025 11:36 PM
மைசூரு : கடனை அடைப்பதற்காக நிலத்தை விற்க மறுத்த மனைவியை, அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
மைசூரு நகரின், கும்பாரகொப்பலு, மஹதேஸ்வரா லே - அவுட்டில் வசிப்பவர் பாப்பண்ணா, 64. இவரது மனைவி காயத்ரி, 54. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பாப்பண்ணா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பல இடங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கினார். இதே காரணத்தால் குடிப்பழக்கத்துக்கும் ஆளானார். தான் சம்பாதிக்கும் பணத்தை குடிக்கே செலவழித்தார்.
காயத்ரி சிறு, சிறு வேலைகள் செய்து குடும்பத்தை கவனித்துக் கொண்டார். இந்த பணத்தையும், பாப்பண்ணா மது வாங்க பறித்துக் கொள்வார். இதற்கிடையே கடனை திருப்பிக் கேட்டு, கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
எனவே ஊரில் இருந்த நிலத்தை விற்று, கடனை அடைக்க பாப்பண்ணா முடிவு செய்தார். இதற்கு மனைவி சம்மதிக்கவில்லை. இந்த விஷயமாக தம்பதிக்கிடையே. தினமும் சண்டை நடந்தது.
நேற்று முன்தினமும், இவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த பாப்பண்ணா, தோசைக்கல்லால் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் காயத்ரி உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், தப்பியோட முயற்சித்தார்.
இவ்வேளையில் வெளியே சென்றிருந்த மகன் வீட்டுக்குள் வந்தார். தந்தை வேகமாக ஓடுவதை கண்ட அவர், தந்தையை பிடித்து உள்ளே அழைத்து வந்தபோது, தாய் கொலையாகி கிடப்பது தெரிந்தது.
அதன்பின் அக்கம், பக்கத்தினர் உதவியுடன், பாப்பண்ணாவை விஜயநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயத்ரியின் உடலை மீட்டனர். வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.