பள்ளி, கல்லுாரிகள், நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
பள்ளி, கல்லுாரிகள், நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : மார் 29, 2026 03:52 AM

மைசூரு: பள்ளி, கல்லுாரிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, மைசூரை சேர்ந்த நபரை, டில்லி போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு தொடர்ச்சியாக இ -மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது. தகவல் பெறும் போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்துவர். கடைசியில் அது புரளி என்பதை ஊர்ஜிதம் செய்வர். இவ்வாறு பலமுறை நடந்ததால், மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க, டில்லி போலீசார் தனிப்படை அமைத்தனர்.
இ - மெயிலில் மிரட்டல் வந்த, ஐ.பி., முகவரியை ஆய்வு செய்த அவர்கள், மைசூரில் இருந்து அந்த இ - மெயில் வந்தது என்பதை உறுதிப்படுத்தினர். மைசூரு பிருந்தாவன் லே - அவுட் இரண்டாவது கட்டம், ஆறாவது குறுக்கு சாலையில் இருந்த நபரை, வி.வி.புரம் போலீசார் உதவியுடன் நேற்று அதிகாலை, 2:30 மணியளவில் பிடித்தனர்.
பிடிபட்டவர் பெயர் சீனிவாஸ், 47, என தெரியவந்தது. திருமணமாகாத இவர், தாயுடன் வசித்து வருகிறார். தொழில்நுட்ப வல்லுனராக இருந்துள்ளார். இவரின் சகோதரர், வேறு இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தொழில்நுட்ப வல்லுனராக இருப்பதால், தான் சிக்காமல் தப்பித்து வந்துள்ளார். ஆனால், போலீசார் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சீனிவாசை கைது செய்துள்ளனர்.
அவரின் மடிக்கணினியை ஆய்வு செய்த போது, ஒரு மாதத்தில் மட்டும், 1,100 வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி, மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்காணிப்பதில் அதிகரித்து வரும் சவாலை, இவ்வழக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் கல்வி பின்னணி குறித்த விபரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றாலும், அவர் பல்வேறு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, நீதிபதிகளுக்கும் மிரட்டல்கள் விடுத்துள்ளார். அவரிடம் இருந்து பல சிம்கார்டுகளை பறிமுதல் செய்துள்ளோம்.
சீனிவாசிடம் மேலும் விசாரணை நடத்த, அவரை போலீசார் டில்லிக்கு அழைத்து செல்ல உள்ளனர். பல மாதங்களாக தேடப்பட்டு வந்த நபர், அரண்மனை நகரமான மைசூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
