ADDED : மார் 04, 2026 05:15 AM
தட்சிண கன்னடா: மதகலவரத்தை துாண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் பகுதியில் ஒரு வழிபாட்டு தலம் உள்ளது. இதன் அருகே வெடிகுண்டை வெடிக்கச் செய்யப் போகிறேன்; அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் தனக்கு தனி செய்தி அனுப்ப வேண்டும்' என, ஷங்கர் என்ற பெயரில், ஒருவர் இன்ஸ்டாகிராமில் நேற்று முன்தினம் பதிவு வெளியிட்டிருந்தார்.
மத கலவரத்தை துாண்டும் வகையில் பதிவு இருப்பதை அறிந்த உல்லால் போலீசார், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
இன்ஸ்டாகிராம் முகவரியை கொண்டு அடையாளம் காணும் பணிகள் நடந்தன. இந்நிலையில் நேற்று மாலை உத்தர கன்னடாவின் பட்கலை சேர்ந்த சங்கர் மஸ்தப்பா மோகர், 35, நேற்று கைது செய்யப்பட்டார்.
அவரின் மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
