/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற 'கொடூரன்' கைது
/
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற 'கொடூரன்' கைது
ADDED : ஜூலை 11, 2025 04:40 AM
பெங்களூரு தெற்கு:சிறுமியை பலாத்காரம் செய்த பின், கேஸ் சிலிண்டரால் அடித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு தெற்கு, தாவரகெரேவில் வசித்து வந்த 14 வயது சிறுமி, ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர், கூலி வேலைக்காக 18 மாதங்களுக்கு முன்பு தான் தாவரகெரேவுக்கு குடிபெயர்ந்தனர்.
பெற்றோர் இருவரும் காலையில், கூலி வேலைக்கு சென்றால், மாலையில் தான் திரும்புவர். அப்போது, சிறுமி வீட்டில் தனியாக இருப்பார்.
நேற்று முன்தினம் மாலையில், பெற்றோர் வீடு திரும்பியபோது, சிறுமி தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், தாவரகெரே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
விசாரணையில், சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர். இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.
இதற்கிடையே, சிறுமி வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த எல்லப்பா, 25, என்பவர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிந்தது.
நேற்று எல்லப்பாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து நேற்று பெங்களூரு தெற்கு மாவட்ட எஸ்.பி., ஆர்.ஸ்ரீனிவாஸ் கவுடா கூறியதாவது:
எல்லப்பா, சிறுமியை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் குறித்து தெரிந்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் எல்லப்பா சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, சிறுமியை பலாத்காரம் செய்தார்.
அதன் பின், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரால், சிறுமியின் தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த கேஸ் சிலிண்டரை பைக்கில் எடுத்துச் சென்று, அருகிலுள்ள கிராமத்தில் விற்று, பணம் வாங்கி உள்ளார்.
பலாத்காரம் செய்தபோது கஞ்சா போதையில் அவர் இருந்தது தெரிந்தது. சிறுமியின் வீட்டிற்கு அவர் எடுத்த வந்த பைக்கும், திருட்டு பைக் என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.