ADDED : நவ 05, 2025 12:51 AM

அன்னபூர்னேஸ்வரிநகர்: கன்னட சீரியல் நடிகைக்கு, தன் அந்தரங்க உறுப்பை புகைப்படம் எடுத்து அனுப்பிய, டெலிவரி நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரை சேர்ந்த, 41 வயது கன்னட சீரியல் நடிகை ஒருவர், அன்னபூர்னேஸ்வரி நகரில் வசிக்கிறார். மூன்று மாதங்களுக்கு முன்பு இவரது பேஸ்புக்கிற்கு, நவீன், 35, என்பவர் நட்பு அழைப்பு கொடுத்தார். இதை நடிகை ஏற்கவில்லை.
கோபம் அடைந்த நவீன், நடிகைக்கு தினமும் புதிய நம்பர்களில் இருந்து, மெசஞ்சர் மூலம் ஆபாச குறுந்தகவல் அனுப்பினார். ஒரு கட்டத்தில் தன் அந்தரங்க உறுப்பையும் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தார். இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த நடிகை, நவீனை நேரில் சந்திக்க அழைத்தார்.
கடந்த 1ம் தேதி அன்னபூர்னேஸ்வரி நகரில் உள்ள ஹோட்டலில் இருவரும் சந்தித்தனர். ஆபாசமாக குறுந்தகவல் அனுப்ப வேண்டாம் என, நவீனிடம் நடிகை கூறி உள்ளார். இதை கேட்க மறுத்த நவீன், தொடர்ந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பி வந்தார்.
இதனால் நவீன் மீது அன்னபூர்னேஸ்வரி போலீஸ் நிலையத்தில் நடிகை புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீனை கைது செய்தனர். இவர், பிரபல டெலிவரி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நடிகர் தர்ஷனின் தோழி பவித்ராவுக்கு, ரேணுகாசாமி என்பவர் இதே போன்று ஆபாச குறுந்தகவல் அனுப்பியதுடன், தன் அந்தரங்க உறுப்பையும் படம் எடுத்து அனுப்பியதால், தர்ஷன், பவித்ரா, அவரது கூட்டாளிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
