'ஜூம்' செயலியில் பதிவு செய்த காரை திருடியவர் கைது
'ஜூம்' செயலியில் பதிவு செய்த காரை திருடியவர் கைது
ADDED : ஜூன் 10, 2026 03:52 AM

மல்லேஸ்வரம்: 'ஜூம்' செயலியில் பதிவு செய்த காரை திருடிய கேரள வாலிபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
பெங்களூரு பேட்ராயனபுராவில் வசிப்பவர் சையது. தனியார் நிறுவன ஊழியர். இவரிடம் 'ஸ்விப்ட்' கார் உள்ளது. வீட்டின் முன் நிறுத்த இடம் இல்லாததால், மல்லேஸ்வரம் 15 வது கிராஸ் எம்.இ.எஸ்., கல்லுாரிக்கு எதிரே நிறுத்தியுள்ளார். காரை வாடகைக்கு விடும் நோக்கில், 'ஜூம்' நிறுவனத்துடன் இணைப்பிலும் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 22ம் தேதி மல்லேஸ்வரத்தில் வசிக்கும் மைக்கேல் என்பவர், ஜூம் செயலி மூலம், சையது காரை முன்பதிவு செய்து வாடகைக்கு எடுத்தார்.
மைக்கேலை சந்தித்த சையது, ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமத்தை வாங்கினார். ஒரு நாள் முழுதும் காரை முன்பதிவு செய்திருந்த மைக்கேல், இரண்டு நாட்கள் ஆகியும், காரை கொண்டு வரவில்லை.
இதுபற்றி ஜூம் நிறுவனத்தின் கவனத்திற்கு, சையது கொண்டு சென்றார். அவர்கள் காரில் பொருத்தப்பட்டு இருந்த, ஜி.பி.எஸ்., கருவி மூலம் கண்டுபிடிக்க முயன்றனர். இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் கார் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
மைக்கேல் கொடுத்த முகவரிக்கு சென்று பார்த்த போது, மூன்று ஆண்டுகளாக இங்கு வசிக்காதது தெரிந்தது. இந்நிலையில் திருடும் நோக்கில் காரை எடுத்து சென்றதாக, மைக்கேல் மீது மல்லேஸ்வரம் போலீசில், சையது புகார் செய்தார்.
இதற்கிடையில் ஜூம் நிறுவனத்தை தொடர்பு கொண்ட மைக்கேல், 'நான் கேரளாவில் உள்ளேன். விரைவில் பெங்களூரு வந்து காரை ஒப்படைத்து விடுகிறேன்' என்றார்.
அவர் பெங்களூரு வந்திருந்தாலும் காரை ஒப்படைக்காமல், 'டிமிக்கி' கொடுத்தார். மொபைல் போனையும் 'சுவிட்ச் ஆப்' செய்தார். சையது அளித்த புகாரில் விசாரணை நடத்திய, மல்லேஸ்வரம் போலீசார் நேற்று முன்தினம், எலக்ட்ரானிக் சிட்டி அருகே, மைக்கேலை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளாவின் கண்ணுாரை சேர்ந்த மைக்கேல், குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர். கண்ணுார், திருச்சூர் மாவட்ட போலீஸ் நிலையங்களில் அவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.
