ADDED : மே 25, 2026 10:30 PM

உடுப்பி: விபத்தில் உயிரிழந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகா கொல்லுார் கிராமத்தில் கடந்த 17ம் தேதி, ஜீப் - மீன் லாரி நேருக்கு நேர் மோதின. இதில், ஜீப்பில் பயணித்த கேரளத்தை சேர்ந்த ஜோதி என்ற பெண், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் அணிந்திருந்த 18 கிராம் தங்க நகைகள் காணாமல் போனதாக, அவருடைய குடும்பத்தினர் கொல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை, போலீசார் சோதனையிட்டனர். விபத்து நடந்த போது, அருகில் இருந்தவர்களிடம் விசாரிக்கப்பட்டது.
இந்த விசாரணையில், கொல்லுார் கிராமத்தை சேர்ந்த ஹேமந்தா, 40, நகைகளை திருடியது தெரியவந்தது. அவரிடம் முறைப்படி விசாரிக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணிடம் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோதிரம், வளையல், செயின் உள்ளிட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
