/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு வேலை ஆசை காட்டி ரூ.200 மோசடி 30 ஆண்டுக்கு பின் போலீசிடம் சிக்கியவர்
/
அரசு வேலை ஆசை காட்டி ரூ.200 மோசடி 30 ஆண்டுக்கு பின் போலீசிடம் சிக்கியவர்
அரசு வேலை ஆசை காட்டி ரூ.200 மோசடி 30 ஆண்டுக்கு பின் போலீசிடம் சிக்கியவர்
அரசு வேலை ஆசை காட்டி ரூ.200 மோசடி 30 ஆண்டுக்கு பின் போலீசிடம் சிக்கியவர்
ADDED : ஜூலை 08, 2025 06:09 AM

உத்தரகன்னடா: கர்நாடகாவில், அரசு வேலை கிடைக்க செய்வதாக நம்ப வைத்து, 200 ரூபாய் பெற்று மோசடி செய்தவர், 30 ஆண்டுகளுக்கு பின் போலீசாரிடம் சிக்கினார்.
கர்நாடக மாநிலம், உத்தரகன்னடா மாவட்டம், சிர்சி தாலுகாவின் உச்சள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மஹாதேவ் வைத்யா. இவர், 1995ல் அரசு வேலைக்கு முயற்சித்து வந்தார்.
அப்போது, உடுப்பியின் குந்தாபுராவை சேர்ந்த கேசவமூர்த்தி ராவ் என்பவர், இவருக்கு அறிமுகமானார்.
கேசவமூர்த்தி ராவ், 'எனக்கு முக்கிய புள்ளிகள் பலரை தெரியும். அரசியல் செல்வாக்கும் உள்ளது. நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால், அரசு வேலை கிடைக்க செய்வேன்' என கூறினார்.
இதை நம்பிய வெங்கடேஷ் 200 ரூபாய் கொடுத்தார். பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தரவில்லை; பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் பதில் தராமல், தலைமறைவானார். இதனால், சிர்சி ஊரக போலீஸ் நிலையத்தில் வெங்கடேஷ் புகார் அளித்தார். போலீசாரும் கேசவமூர்த்தி ராவை தேடினர். அவர் கிடைக்காததால் வழக்கை கிடப்பில் போட்டனர்.
சமீபத்தில் சிர்சி ஊரக போலீஸ் நிலையத்திற்கு, சர்க்கிள் இன்ஸ்பெக்டராக வந்த மஞ்சுநாத் கவுடா, முடிக்கப்படாத பழைய வழக்குகளின் பட்டியலை பார்வையிட்டார். 30 ஆண்டுக்கு முன், அரசு வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து, 200 ரூபாய் பெற்று மோசடி செய்த வழக்கை கவனித்தார்.
தேடப்பட்ட குற்றவாளி கேசவமூர்த்தி ராவ், 55, குந்தாபுராவை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் கவுடா இதற்கு முன், உடுப்பி பகுதியில் பணியாற்றியவர். எனவே அவர் குந்தாபுரா போலீசாரை தொடர்பு கொண்டு, கேசவமூர்த்தி ராவை பற்றிய தகவல்களை விசாரித்து கூறும்படி கேட்டுக்கொண்டார்.
அவர்களும் விசாரித்து, தகவல் கொடுத்தனர். அவர் தற்போது பெங்களூரில் வசிப்பது தெரிந்தது. மொபைல் போன் எண்ணும் கிடைத்தது. இதை வைத்து அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பெங்களூரில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, சிர்சி ஊரக போலீசார் சென்றிருந்தனர். அவர்களை தொடர்பு கொண்ட மஞ்சுநாத் கவுடா, கேசவமூர்த்தி ராவை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அவர்களும் மொபைல் போனில் கேசவமூர்த்தி ராவை தொடர்பு கொண்டனர். 'உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது; வந்து பெற்று கொள்ளுங்கள்' எனக் கூறினர்.
இதன்படி, நேற்று முன்தினம் பார்சலை பெற வந்த அவரை கைது செய்து, சிர்சிக்கு அழைத்து சென்றனர். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரகன்னடா எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.