ரூ.500 அபராதம் செலுத்த முயன்று ரூ.2.32 லட்சத்தை இழந்த நபர்
ரூ.500 அபராதம் செலுத்த முயன்று ரூ.2.32 லட்சத்தை இழந்த நபர்
ADDED : ஜன 30, 2026 06:34 AM
பெங்களூரு: போக்குவரத்து விதியை மீறியதற்காக, ஆன்லைனில் அபராதம் செலுத்த முயன்ற மென்பொறியாளர், 2.32 லட்சம் ரூபாயை இழந்து உள்ளார்.
பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த 45 வயது நபருக்கு, கடந்த 26ம் தேதி 'லிங்க்' ஒன்று வந்தது. லிங்க் அனுப்பப்பட்ட எண்ணில் இருந்து வந்த மொபைல் போன் அழைப்பை அவர் எடுத்தார்.
எதிர்முனையில் பேசிய நபர், 'போக்குவரத்து போலீசில் இருந்து பேசுவதாகவும், போக்குவரத்து விதியை மீறி உள்ளதால், அனுப்பப்பட்ட 'லிங்க்'கில், 500 ரூபாய் செலுத்த வேண்டும்' என்றும் கூறினார். மென்பொறியாளரும், அந்த லிங்கை திறந்து, தனது கிரெடிட் கார்டு எண், சிசிவி எண்களை பதிவு செய்தார். ஒரு சில நிமிடங்களில், அவரின் கணக்கில் இருந்து, 2.23 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாக, குறுந்தகவல் வந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஒயிட்பீல்டு சி.இ.என்., போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் எச்சரிக்கை உங்களுக்கு வரும் லிங்க்குகள், கியூஆர் கோடு, ஏபிகே பைல்களை தொட வேண்டாம். போலீசாரின் உண்மையான செயலிகளை, 'கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர்'ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களின் வங்கி கணக்கு விபரம், பாஸ்புக், பாஸ்வேர்டு, ஓ.டி.பி., தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம். உங்கள் மொபைல் போனில் செயலியை அவ்வப்போது புதுப்பித்து கொண்டே இருங்கள்.
வாகன போக்குவரத்து விதிமீறலை, பி.டி.பி., அஸ்த்ரா, கர்நாடகா ஸ்டேட் போலீஸ், பெங்களூரு டிராபிக் போலீஸ் அல்லது கர்நாடகா ஒன் இணையதளத்தில் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் பகுதிக்கு உட்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு சென்று செலுத்தலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
