/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காலாவதி பொருட்களில் உணவு பெங்களூரு ஹோட்டலில் அதிர்ச்சி
/
காலாவதி பொருட்களில் உணவு பெங்களூரு ஹோட்டலில் அதிர்ச்சி
காலாவதி பொருட்களில் உணவு பெங்களூரு ஹோட்டலில் அதிர்ச்சி
காலாவதி பொருட்களில் உணவு பெங்களூரு ஹோட்டலில் அதிர்ச்சி
ADDED : ஜன 30, 2026 06:34 AM
பெங்களூரு: பெங்களூரின் சில ஹோட்டல், ரெஸ்டாரென்ட்களில் காலாவதியான பொருட்கள் பயன்படுத்தி, உணவு தயாரிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூரு, ராஜாஜிநகரின் சிவநகர் சிக்னல் அருகில், 'ஹங்க்ரி பைட்ஸ்' என்ற பெயரில் ரெஸ்டாரென்ட் உள்ளது. இங்கு, உணவு தின்பண்டங்கள் தயாரிக்க, காலாவதியான பொருட்களை பயன்படுத்துவதாக தகவல் வெளியானது. ஊடகத்தினர் ரெஸ்டாரென்டுக்கு சென்று, ஆய்வு செய்த போது, காலாவதியான பொருட்களை பயன்படுத்தி உணவு தயாரிப்பது தெரிய வந்தது.
சாண்ட்விச், மொமோஸ், பிரென்ஞ் பிரைஸ் என பல உணவு வகைகளுக்கும், சாஸ், ஜூஸ் பிளேவர் உட்பட பல்வேறு பொருட்கள் காலாவதியாகி ஓராண்டாகியும், அதையே பயன்படுத்துவதையும் கண்டுபிடித்துள்ளனர். இவற்றை சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த விஷயத்தை உணவுத்துறையின் கவனத்துக்கு ஊடகத்தினர் கொண்டு சென்றனர். சுகாதாரத்துறை சில நாட்களுக்கு முன், இந்த ரெஸ்டாரென்டுக்கு சென்று ஆய்வு செய்து, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதற்கு பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது போன்ற பிரபலமான ரெஸ்டாரென்டுகளுக்கு குறைவான தொகையை அபராதமாக விதித்தால், சட்டத்தை பற்றிய பயம் இருக்காது என, கருத்து தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
முடிந்த வரை ஹோட்டல், ரெஸ்டாரென்ட்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஒருவேளை சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அங்குள்ள சமையல் அறை சுத்தமாக உள்ளதா, பயன்படுத்தும் பொருட்கள் தரமானவையா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பெரிய ஹோட்டல்களில், அனைத்தும் நன்றாக இருக்கும் என, கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். தரமற்ற பொருட்களை பயன்படுத்துவது தெரிந்தால், அதிகாரிகளிடம் புகார் தாருங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

