வருங்கால மனைவியை கழுத்தறுத்து கொன்ற வாலிபருக்கு வலை
வருங்கால மனைவியை கழுத்தறுத்து கொன்ற வாலிபருக்கு வலை
ADDED : மார் 18, 2026 05:36 AM
டி.ஜே.ஹள்ளி: வருங்கால மனைவியை கத்தியால் கழுத்து அறுத்து கொன்ற, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளியை சேர்ந்தவர் வாலிபர் ஷபீல், 20; இளம்பெண் ஜோயா, 17. இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ரம்ஜானுக்கு பின், திருமணம் நடக்க இருந்தது. ஷபீல் குடும்பத்தினருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில், ஷபீலும், ஜோயாவும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
நேற்று காலை, 6:00 மணிக்கு, அந்த வீட்டில் இருவரும் சந்தித்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏதோ காரணத்துக்காக தகராறு ஏற்பட்டுள்ளது.
கோபம் அடைந்த ஷபீல், ஜோயாவின் கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று விட்டு, அங்கிருந்து தப்பினார். காலை, 10:30 மணியளவில் ஷபீல் குடும்பத்தினர், பாழடைந்த வீட்டிற்கு சென்ற போது, ஜோயா கொலையானது தெரியவந்தது.
தகவல் அறிந்த கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் ஆம்தே மற்றும் டி.ஜே.ஹள்ளி போலீசார் அங்கு சென்றனர். ஜோயாவின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தலைமறைவாக உள்ள ஷபீலை போலீஸ் தேடுகிறது. அவர் கைதான பின்னரே, கொலைக்கான காரணம் தெரியவரும்.
