கடலோர, மலை மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கடலோர, மலை மாவட்டங்களில் மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ADDED : மே 30, 2026 01:56 AM
பெங்களூரு: வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் இன்று முதல் நாளை வரை கர்நாடகாவில் கடலோரம், மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மாநிலத்தில் தீவிரமடைந்துள்ள பருவமழைக்கு முந்தைய மழை, மேலும் அதிகரித்து உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம், நேரடியாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களிலும்; ஷிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு ஆகிய மலை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
மஞ்சள் எச்சரிக்கை புயலின் வேகத்தால் கடல் கொந்தளிப்பாக மாறி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எந்த காரணத்தை கொண்டும், கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
கனமழை காரணமாக, கடலோர மாவட்டங்கள்; மலை மாவட்டங்களில் நாளை வரை கன மழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுபோல, வட மாவட்டங்களின் பெலகாவி, தார்வாட், பாகல்கோட் உட்பட முக்கிய மாவட்டங்களில் இன்று ஆலங்கட்டி மழை பெய்ய உள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், கலபுரகி, ராய்ச்சூர் போன்ற கல்யாண கர்நாடகா பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகும்.
பெங்களூரு நகரம், பெங்களூரு கிராமப்புற மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலை 32 டிகிரியாக உள்ளது. மே 31ம் தேதி வரை புயலின் தீவிரம் குறையும். இன்று ஆங்காங்கே மிதமான மழை பெய்யும்.
நாளையும், நாளை மறுநாளான ஜூன் 1 ஆகிய நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். இதனால் நகரம் குளிர்ச்சியாக இருக்கும். வெப்ப நிலையும் 31 டிகிரி செல்ஷியசாக குறையும்.
அறிவுரை அடுத்த இரண்டு நாட்களில் திடீரென புயல்கள் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
புயலோ, கனமழையோ துவங்கியவுடன், பொது மக்கள், திறந்தவெளியில் இருக்கக்கூடாது. உடனடியாக பாதுகாப்பான மற்றும் நிரந்தரமான கட்டடங்களுக்கு செல்ல வேண்டும்.
பழைய மரங்கள், பெரிய விளம்பர பலகைகள் அல்லது மின் கம்பங்களின் கீழ் வாகனங்களை நிறுத்துவதை கண்டிப் பாக தவிர்க்க வேண்டும்.
திறந்தவெளி வயல்களில் அறுவடை செய்து, சேமித்து வைக்கப்பட்டு உள்ள பயிர்களை மழையில் இருந்து பாதுகாப்பதற்காக, அவற்றை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் விவசாயிகள் மூடி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
