/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
/
வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
ADDED : மார் 09, 2026 06:08 AM
பெங்களூரு: பெங்களூரு, மங்களூரு, பல்லாரி உட்பட, பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கர்ப்பிணியர், மூத்த குடிமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
மார்ச் மாத ஆரம்பத்திலேயே, வெப்பத்தின் தாக்கம் ஏறுமுகமாகிறது. கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிணகன்னடா, உத்தரகன்னடா, வட மாவட்டங்களான பெலகாவி, பீதர், விஜயபுரா, பாகல்கோட், ஹாவேரி, கதக், தார்வாட், கலபுரகி, கொப்பால், பல்லாரி, ராய்ச்சூர், யாத்கிர், விஜயநகரா மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. வழக்கத்தை விட நான்கு முதல் ஐந்து டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது .
அதே போன்று, தென் மாவட்டங்களான பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், சிக்கபல்லாபூர், சித்ரதுர்கா, தாவணகெரே, கோலார், மாண்டியா, ராம்நகர், சிக்கமகளூரு, ஷிவமொக்கா, ஹாசன், குடகு, சாம்ராஜ்நகர், மைசூரு, துமகூரு மாவட்டங்களிலும் வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.
அடுத்த சில நாட்களுக்கு, இதே சூழ்நிலை நீடிக்கும். மார்ச் இரண்டாம் வாரத்துக்கு பின், வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.
எனவே மக்கள் கவனமாக இருப்பது நல்லது. தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம், மிக அதிகமாக உள்ளது. கர்ப்பிணியர், சிறார்கள், மூத்த குடிமக்கள் கவனமாக இருக்க வேண்டும். காலை 11:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை, வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது. வெயிலில் சென்றால் உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதிகமான தண்ணீர், குளிர்பானங்கள், மோர், பழரசங்கள், இளநீர் அருந்தி, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். உடல் நிலை பாதிப்பு அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

