ஜூன் 9ம் தேதி வரை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ஜூன் 9ம் தேதி வரை மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
ADDED : ஜூன் 03, 2026 11:03 PM
பெங்களூரு: 'கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், ஜூன் 9ம் தேதி வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியதாவது:
கர்நாடகாவின் பல மாவட்டங்களில், ஏற்கனவே மழை பெய்து வருகிறது. ஜூன் 9ம் தேதி வரை, மழை நீடிக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. வட மாவட்டங்கள், கல்யாண கர்நாடகா பகுதிகளில், கன மழை பெய்யும். நாளை - இன்று - முதல், 11 மாவட்டங்களுக்கு, 'ஆரெஞ்ச் அலெர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது.
பீதர், கலபுரகி, விஜயபுரா, யாத்கிர், பாகல்கோட், பெலகாவி, ராய்ச்சூர், கொப்பால், கதக், தார்வாட், ஹாவேரி மாவட்டங்களில், அதிகமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மழை பெய்யும் போது, மணிக்கு 40 முதல், 50 கி.மீ, வேகத்தில் பலமான காற்று வீசும்.
கடலோர மாவட்டங்கள், தெற்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்யலாம். சிக்கமகளூரு, ஹாசன், குடகு, தட்சிணகன்னடா, உடுப்பி, மைசூரு, மாண்டியா மாவட்டங்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன.
மற்ற பகுதிகளில் சாதாரண மழை பெய்யும். வெப்ப நிலை குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவும். பலத்த காற்று, இடி மின்னல் இருக்கும் என்பதால், விவசாயிகள், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில், அடைக்கலம் பெறுவது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
