/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயிலில் விதிகளை மீறும் பயணியர்... அதிகரிப்பு! ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வழக்குகள் பதிவு
/
மெட்ரோ ரயிலில் விதிகளை மீறும் பயணியர்... அதிகரிப்பு! ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வழக்குகள் பதிவு
மெட்ரோ ரயிலில் விதிகளை மீறும் பயணியர்... அதிகரிப்பு! ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வழக்குகள் பதிவு
மெட்ரோ ரயிலில் விதிகளை மீறும் பயணியர்... அதிகரிப்பு! ஒரே ஆண்டில் ஒரு லட்சம் வழக்குகள் பதிவு
ADDED : பிப் 02, 2026 04:30 AM

பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கிய பின், மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். துாசி, வாகனங்களின் சத்தம் இல்லாமல் பயணிக்கின்றனர். பயண நேரமும் குறைகிறது. ஆனால், மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சக பயணியரால், தொந்தரவு ஏற்படுகிறது.
அபராதம் விதிப்பு மெட்ரோ ரயில்வே சட்டம் - 2002ன் படி, சக பயணியருக்கு தொந்தரவு ஏற்படுத்துவது குற்றமாகும். இத்தகைய குற்றத்துக்கு அபராதம் விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் போக்குவரத்து நிறுவனம், பயணியருக்கு விதிமுறை வகுத்துள்ளது. சக பயணியருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில், சத்தமாக பாட்டு கேட்பது, மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் உணவு, சிற்றுண்டி சாப்பிட கூடாது.
பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்த கூடாது என, உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த விதிமுறைகளை பயணியர் பொருட்படுத்துவது இல்லை.
மெட்ரோ ரயில்களில், 'ஹெட் போன்' இல்லாமல், சத்தமாக பாட்டு கேட்பது, வீடியோ ரீல்ஸ் பார்ப்பது, சத்தமாக பேசுவது, குட்கா, பான் மசாலா பயன்படுத்துவது, மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொள்வது என, பல விதங்களில், விதிமுறைகளை மீறுகின்றனர்.
தனி குழுக்கள் கர்ப்பிணியர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வந்தாலும், அவர்களுக்கான இருக்கைகளை விட்டுத்தராமல், முரண்டு பிடிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் விதிகளை மீறும் பயணியரை கண்காணிக்க, இரண்டு ஊர்க்காவல் படை ஊழியர்கள் அடங்கிய, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
விதிகளை மீறுவோரை கட்டுப்படுத்தும் நோக்கில், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடுமையான நடவடிக்கைக்கு பின்னரும், விதிமீறல்கள் குறையவில்லை. கடந்த ஆண்டு இது தொடர்பாக, ஒரு லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டு மெட்ரோ ரயிலில், மொபைல் போனில் அதிக சத்தமாக பாடல் கேட்ட, 57,538 பேர் மீது, வழக்கு பதிவானது.
இவர்களை சிறப்பு குழுவினர் கண்டித்து, பாடலை நிறுத்த செய்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளை ஆக்கிரமித்த 37,038 பேர், ரயிலில் உணவருந்திய 1,907 பயணியர், குட்கா, பான் மசாலா பயன்படுத்திய 1,677 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எச்சரிக்கை தினமும் ஏதாவது ஒரு மெட்ரோ ரயிலில், பயணியர் விதிமுறைகளை மீறுகின்றனர். இதே காரணத்தால், பயணியர் இடையே, சண்டையும் நடந்துள்ளது. மெட்ரோ பாதுகாப்பு ஊழியர் தலையிட்டு, சமாதானம் செய்து அனுப்புகின்றனர். மெட்ரோ நிறுவனம் வகுத்துள்ள விதிகளை, பயணியர் தவறாமல் பின்பற்ற வேண்டும்.சக பயணியருக்கு தொந்தரவு கொடுக்காமல் பயணிக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கை சந்திக்க வேண்டி வரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

