மின் கட்டணத்தை உயர்த்தும்படி வினியோக நிறுவனங்கள் கோரிக்கை மேல்சபையில் அமைச்சர் தகவல்
மின் கட்டணத்தை உயர்த்தும்படி வினியோக நிறுவனங்கள் கோரிக்கை மேல்சபையில் அமைச்சர் தகவல்
ADDED : மார் 17, 2026 06:03 AM

பெங்களூரு: ''மின் கட்டணத்தை உயர்த்தும்படி, மின் விநியோக நிறுவனங்கள், கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன,'' என, கலால்துறை அமைச்சர் போசராஜு தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் மஞ்சேகவுடாவின் கேள்விக்கு, மின்சாரத்துறை அமைச்சர் ஜார்ஜ் சார்பில், அமைச்சர் போசராஜு அளித்த பதில்:
மின் வினியோக நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஆணையம் இது குறித்து ஆய்வு செய்து மின் கட்டணத்தை உயர்த்தும். பெஸ்காம் என்ற, பெங்களூரு மின் வினியோக நிறுவனம், 2,802.80 கோடி ரூபாய் உட்பட, அனைத்து மின் வினியோக நிறுவனங்களும், 4,516 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையில் உள்ளன.
நஷ்டத்தை தவிர்க்க மேற்கொண்ட நடவடிக்கையால், 110.05 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது. கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதற்காக, 2023ன் ஆகஸ்ட் முதல் நடப்பாண்டு மார்ச் வரை, 25,076 கோடி ரூபாயை அரசு செலுத்தியுள்ளது. இத்திட்டம் ஏழை மக்களின் சுமையை குறைத்துள்ளது.
நெசவாளர்களின் மின் விசை தறிகளுக்கு, 10 ஹெச்.பி., முதல், 20 ஹெச்.பி., வரை யூனிட்டுக்கு அரசு 3.25 ரூபாயை அரசு செலுத்துகிறது. கிராம பஞ்சாயத்துகளின் எல்லைக்கு உட்பட்ட தொழிற்சாலைகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு 25 பைசா வீதம், தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
