/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பலத்தை காட்ட துடிக்கும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
/
பலத்தை காட்ட துடிக்கும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
பலத்தை காட்ட துடிக்கும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
பலத்தை காட்ட துடிக்கும் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
ADDED : மார் 04, 2026 05:34 AM

கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கான பிரச்னை நடப்பது ஊர் அறிந்த விஷயமாக உள்ளது. சித்தராமையா, சிவகுமார் இடையே நடக்கும் பிரச்னை குறித்த செய்திகளுக்கு பஞ்சமில்லை. தினமும் வெளியாகின்றன. இந்த செய்திகளை மேலும் சுவாரசியமாக்கும் வகையில், மற்றொரு விஷயம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது.
கர்நாடகாவில் எப்போது எல்லாம் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர், முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற பேச்சு அடிபடுகிறதோ, அப்போதெல்லாம் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் பெயரும் அடிபடுவது வழக்கம். இவர், அமைச்சராக இருப்பது பெரிய பலமாக உள்ளது. முதல்வராக தனக்கும் ஆசை இருக்கிறது என, பல முறை வெளிப்படையாக கூறியுள்ளார்.
தனக்கு இருக்கும் செல்வாக்கை கட்சி மேலிடத்தில் காண்பிக்க போராடியும் வருகிறார்.
இதற்காக, தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் அடிக்கடி கூட்டம் நடத்துவது; டில்லிக்கு சென்று தேசிய தலைவர்களை சந்தித்து பேசுவது போன்ற வேலைகளை செய்து வருகிறார். டில்லி செல்வது குறித்து கேட்டால், சம்பந்தமில்லாத பதில்களை கட்டவிழ்த்து விடுவார். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று அங்குள்ள மா.செ., மற்றும் மாவட்ட தலைவர்களை நேரில் சந்திக்க சதீஷ் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக ரகசியமாக செல்ல திட்டமிட்டு உள்ளார்.
இதன் மூலம், தன் ஆதரவை தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள் மத்தியில் அதிகரிக்கும் வேலையை செய்ய முடிவு செய்து உள்ளார்.
அதுமட்டுமின்றி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அடையும் முயற்சியிலும் இறங்கி உள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது. இதையும் பல முறை ஊர்ஜிதப்படுத்தி உள்ளார். மேலும், காங்கிரசில் உள்ள பட்டியல், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு தலைவராகும் முயற்சியிலும் உள்ளார்.
இப்படி ஒரே நேரத்தில் கட்சி தலைவர் பதவி, முதல்வர் நாற்காலி போட்டியில் இணைவது, பட்டியல், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களின் தலைவராக உருவெடுப்பது என, மூன்று திட்டங்களுக்கும் சரியாக காய் நகர்த்தி வருகிறார். தன் பலத்தை எப்படியாவது மேலிடத்திற்கு நிரூபித்தே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டும் செயல்படுகிறார். இவரின் முயற்சிகள் பலன் அளித்தால் சரிதான்.
- நமது நிருபர் -:

