தசரா யானைகளை பார்க்க கட்டணம் எதிர்ப்பால் திரும்ப பெற்றார் அமைச்சர்
தசரா யானைகளை பார்க்க கட்டணம் எதிர்ப்பால் திரும்ப பெற்றார் அமைச்சர்
ADDED : ஆக 31, 2026 01:59 AM
மைசூரு: மைசூரு தசராவுக்காக அரண்மனை வளாகத்திற்கு வந்துள்ள யானைகளை பார்க்க கட்டணம் வசூலிக்க ஆலோசித்த வனத்துறையின் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், திரும்ப பெறும்படி அதிகாரிகளுக்கு, அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டார்.
மைசூரு தசரா விழாவுக்காக, முதற்கட்டமாக ஒன்பது யானைகள் மைசூரு நகருக்கு வந்துள்ளன. கடந்த 28ம் தேதி ஆரண்யபவனில் இருந்து அரண்மனை வளாகத்திற்கு யானைகள் வந்தன.
ஆர்வம் யானையை பார்க்க உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பெருமளவில் கூடினர். யானையை பார்க்க வரும் பெரியவர்களுக்கு 100 ரூபாய்; சிறியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், நுழைவு சீட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
இருப்பினும், தசரா யானைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே உள்ள உணர்வுப்பூர்வமான பிணைப்பை கருதி, யானைகளை பார்க்க கட்டணம் வசூலிப்பதா என பொதுமக்களிடம் அதிருப்தி எழுந்தது.
தசரா யானை ஊர்வலம், மைசூரு மக்களின் கலாசாரம், பாரம்பரியத்துடன் பிரிக்க முடியாதபடி பிணைந்திருப்பதால், அதை பார்க்க பணம் வசூலிப்பது பொறுத்தமற்றது என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டியின் ஆலோசனையின்படி, யானைகள் ஊர்வலத்தை பார்க்க, வனத்துறை நுழைவு சீட்டு முறையை அமல்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த கட்டண வசூலிப்பின் நோக்கம் கூட்டத்தை கட்டுப்படுத்துவதும், யானைகளின் பாகன்கள், உதவியாளர்கள் நலனுக்காக, இந்த பணம் பயன்படுத்தப்படும் என்றும் விளக்கப்பட்டது.
இலவசம் இவ்விஷயம், வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் கவனத்துக்கு சென்றது. 'யானைகளை பார்க்க கட்டணம் வசூலிக்க வேண்டாம். பொதுமக்கள் இலவசமாக பார்த்து செல்ல அனுமதிக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, கட்டணம் வசூலிக்கும் திட்டம் திரும்ப பெறப்பட்டது.
வனத்துறை துணை பாதுகாப்பு வன அதிகாரி டாக்டர் பிரபு கவுா கூறுகையில், ''தசரா யானைகளை பார்க்க சுற்றுலா பயணியர் விரும்பினால், அவர்களுக்கு மின்னணு நுழைவு சீட்டு வசதி வழங்குவது குறித்து யோசனை இருந்தது.
''இருப்பினும், இது பரிசீலனை கட்டத்தில் இருந்த முன்மொழிவு மட்டுமே. தசரா யானைகளை பார்க்க வனத்துறை நுழைவு சீட்டுகளையும் வழங்கவில்லை,'' என்றார்.
