ADDED : ஜூன் 06, 2026 03:46 AM

கும்பலகோடு: காணாமல் போனதாக தேடப்பட்ட பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். வரதட்சணை கேட்டு கணவர் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்ததாக, பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
மைசூரின் எச்.டி.கோட் சரகூரு கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 31. இவரது மனைவி ஜோதி, 29. தம்பதிக்கு, நான்கு வயதில் மகன் உள்ளார். மனைவி, மகனுடன் பெங்களூரு கொம்மகட்டாவில் வாடகை வீட்டில் சரத்குமார் வசிக்கிறார்.
இவர், வாடகை கார் ஓட்டி வருகிறார். 1ம் தேதி, மகனை வீட்டில் விட்டு ஜோதி வெளியேறினார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மொபைல் போனும் சுவிட்ச் - ஆப் செய்யப்பட்டு இருந்தது.
ஜோதி மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தரும் படியும், கும்பலகோடு போலீஸ் நிலையத்தில் சரத்குமார் புகார் செய்தார். ஜோதியை போலீசார் தேடினர்.
இந்நிலையில், கொம்மகட்டா ஏரியில் பெண்ணின் உடல் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, ஏரியில் மிதந்த பெண், மாயமானதாக தேடப்பட்டு வந்த ஜோதி என தெரிந்தது.
அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரதட்சணை கேட்டு சரத்குமார் கொடுமைப்படுத்தியதால் தான் ஏரியில் குதித்து, ஜோதி தற்கொலை செய்து கொண்டார் என, ஜோதியின் பெற்றோர், புகார் செய்தனர். அதன்படி, சரத்குமாரிடம் விசாரணை நடக்கிறது.
