ஜி.பி.ஏ., தேர்தலில் பா.ஜ.,விடம் 100 வார்டுகளை கேட்கும் ம.ஜ.த.,
ஜி.பி.ஏ., தேர்தலில் பா.ஜ.,விடம் 100 வார்டுகளை கேட்கும் ம.ஜ.த.,
ADDED : மே 27, 2026 12:06 AM

-நமது நிருபர் -
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் ஐந்து மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மொத்தம், 369 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்குமான தேர்தல், விரைவில் நடக்க உள்ளது.
தேர்தலுக்கான வியூகங்கள், திட்டங்கள் வகுப்பது துவங்கிவிட்டன. இதனால், தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.
இது, வெறும் மாநகராட்சி தேர்தல் மட்டுமல்ல. கர்நாடக அரசியலின் திசையைத் தீர்மானிக்கும் குட்டி சட்டசபை தேர்தல் என்ற ரீதியில் கட்சிகள் செயல்படுகின்றன.
'இந்த தேர்தலில் எப்படியாவது ஆளுங்கட்சியான காங்கிரசை வீழ்த்திவிட வேண்டும்' என்ற நோக்கில், பா.ஜ., காய் நகர்த்தி வருகிறது. இதற்கு, ம.ஜ.த.,வின் உதவியையும் நாடி உள்ளது.
கர்நாடகாவில் பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த.,வும் அங்கம் வகிக்கிறது. மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் என இரு கட்சி தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
ம.ஜ.த.,வோ, பா.ஜ.,விடம், 100 வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளது.
எப்படியாவது, 100 வார்டுகளை வாங்கி விட வேண்டும் என மத்திய அமைச்சர் குமாரசாமி, அவரது மகன் நிகில் பிடிவாதமாக உள்ளனர்.
குறிப்பாக, யஷ்வந்த்பூர், ஆர்.ஆர்., நகர், தாசரஹள்ளி, பெங்களூரு தெற்கு போன்ற, ஒக்கலிகா சமூகத்தினர் அதிகம் வசிக்கும் வார்டுகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
பெங்களூரில், 2010, 2015 மாநகராட்சி தேர்தல்களில், பா.ஜ., தனித்து போட்டியிட்டு, அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது. அதே சமயம், ம.ஜ.த.,வோ 20 வார்டுகளுக்கு மேல் வென்றதில்லை. இதனால், ம.ஜ.த.,வின் கோரிக்கை பா.ஜ., தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, 100 வார்டுகளை, ம.ஜ.த., விற்கு கொடுத்தால், பா.ஜ.,வில் உட்கட்சி பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இருப்பினும், 2028 சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு, காங்கிரசின் ஓட்டு வங்கியைப் பிரிக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்து உள்ளது.
இதனால், ம.ஜ.த.,வுடன் இணக்கமாக போகவே, வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
