ADDED : மே 17, 2026 11:30 PM

மைசூரு: ''ம.ஜ.த., கட்சி பழைய மைசூரு பகுதி உட்பட மாநிலம் முழுதும் பலமாக உள்ளது,'' என ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரின் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நேற்று நடந்த மக்களுடன் ம.ஜ.த., நிறைவு கூட்டத்தில், நிகில் பேசியதாவது:
பழைய மைசூரு பகுதியில் மட்டுமே ம.ஜ.த., உள்ளது என்று நம் அரசியல் எதிரிகள் கூறுகின்றனர். இருப்பினும், எங்கள் கட்சி கல்யாண கர்நாடகா, கித்துார் கர்நாடகா உட்பட மாநிலம் முழுதும் பலமாக உள்ளது.
வெள்ளி விழா நமக்கு மாநில மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர். பஞ்சரத்னா திட்டங்கள் செயல்படுத்த குமாரசாமி பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் விரும்பிய பலன் கிடைக்கவில்லை. கட்சியை மாநில அளவில் பலப்படுத்த இரவு, பகலாக உழைத்து வருகிறார்.
தேவகவுடாவால் உருவான ம.ஜ.த., தோன்றி, வெள்ளி விழா கொண்டாடி உள்ளது. கன்னட மொழி, நீர், நிலம், அடையாளத்துக்காகவும், பாதுகாப்புக்காகவும் இக்கட்சி உருவானது.
நம் கட்சியில் வளர்ந்து, இன்று மற்ற கட்சிகளுக்கு தாவிய பலர், உயர் பதவிகளை வகிக்கின்றனர். அடுத்த சட்டசபை தேர்தலில், மைசூரு மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் என்.டி.ஏ., வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். மத்தியில் மீண்டும் என்.டி.ஏ., அரசு அமைய வேண்டும் என்று நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவுக்கு பின், யார் முதல்வராக வேண்டும் என்பதை இப்போது கூற மாட்டேன். குமாரசாமி குறுகிய காலம் முதல்வராக இருந்தபோது, அவரின் நிர்வாகத்தை மக்கள் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். எனவே, முதல்வர் நாற்காலி முக்கியமல்ல; நாட்டின் வளர்ச்சியே முக்கியம்.
ஆதரவு எதிர்பாராத நிகழ்வு காரணமாக, குமாரசாமி லோக்சபாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த தொகுதியில் இருந்து பலரை வளர்த்துள்ளீர்கள். எங்கள் கட்சி சமூக நீதியுடன் அரசியல் செய்து வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும், அனைத்து அந்தஸ்துகளையும் வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
