ADDED : மே 19, 2026 11:32 PM

- நமது நிருபர் -: மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா. இவர், கட்சி செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார். பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ம.ஜ.த., இணைந்தது.
இதனால் கட்சி மீது அதிருப்தி அடைந்த ஜி.டி.தேவகவுடா, கட்சி நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார். ஆளும் காங்கிரஸ் தலைவர்களுடன் நெருக்கம் காண்பிக்க துவங்கினார்.
இது, குமாரசாமியை கோபமடைய செய்தது. அவரும், ஜி.டி.தேவகவுடாவை எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பதில்லை. இதனால் ஜி.டி.தேவகவுடாவுக்கும், அவரது மகனும், ஹூன்சூர் எம்.எல்.ஏ.,வுமான ஹரிஷ் கவுடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது.
ஜி.டி.தேவகவுடாவுக்கு எதிராக ம.ஜ.த., முன்னாள் அமைச்சர் சா.ரா.மகேஷ், அவ்வப்போது பேசி வருகிறார். தொண்டர்களும் அவர் மீது அதிருப்தி அடைந்து உள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன் கட்சியின் பெங்களூரில் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடாவை, சந்தித்த ஜி.டி.தேவகவுடா, 'அடுத்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ம.ஜ.த., சார்பில் போட்டியிடுவேன்' என கூறினார். இதற்கு சா.ரா.மகேஷ், 'இது, சந்தர்ப்பவாத அரசியல்' என விமர்சித்தார். ம.ஜ.த., இளைஞர் அணி மாநில தலைவர் நிகில் குமாரசாமி, மாநிலம் முழுதும், 'மக்களுடன் ம.ஜ.த.,' நிகழ்ச்சி நடத்தி வந்தார். இதன் நிறைவு விழா மைசூரில் குறிப்பாக, சாமுண்டீஸ்வரி தொகுதியில் நடத்த வேண்டும் என, சா.ரா.மகேஷ் பிடிவாதமாக இருந்தார்.
அவரின் ஆலோசனைப்படி, சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவகவுடாவின் மகன் ஹரிஷ் கவுடா மூலம் மாநாடு ஏற்பாடுகளை செய்ய துவங்கினார். ஹரிஷ் கவுடாவும் தன் தந்தையின் தொகுதியில் கட்சிக்காக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.
மாநாடும் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மேடையில் பேசிய குமாரசாமியும், ஹரிஷ் கவுடாவின் பணியை மெச்சினார்.
அடுத்த சட்டசபை தேர்தலில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜி.டி.தேவகவுடாவுக்கு 'செக்' வைக்கும் வகையில், ஹூன்சூர் எம்.எல்.ஏ.,வாக உள்ள அவரது மகன் ஹரிஷ் கவுடாவை களம் இறக்க குமாரசாமி விரும்புவதாக கூறப்படுகிறது.
