வனப்பகுதி மக்களிடம் மனிதாபிமானம் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
வனப்பகுதி மக்களிடம் மனிதாபிமானம் அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ., அறிவுரை
ADDED : ஏப் 24, 2025 07:17 AM

குடகு: “வனப்பகுதியில் வசிக்கும் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்,” என, வனத்துறையினரை, முதல்வரின் சட்ட ஆலோசகரும், எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணா அறிவுறுத்தினார்.
குடகு மாவட்டம், பொன்னம்பேட்டை பிருனானி கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட தெரலு கிராமம் உட்பட சுற்றுப்புறப் பகுதியில், ஒரு புலி பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த புலியை பிடிக்கும் பணியில், இரண்டு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இப்பணியை முதல்வர் சித்தராமையாவின் சட்ட ஆலோசகரும், எம்.எல்.ஏ.,வுமான பொன்னண்ணா நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:
கடந்த ஐந்து நாட்களாக புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக துபாரே யானைகள் முகாமில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. ராணுவத்தினர் போன்று, வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து, பணியாற்றி வருகின்றனர்.
பழங்குடியினருக்கு வீட்டு வசதி செய்து தரப்படும் என்று ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளன.
அதற்கு ஏற்ப, நீங்கள் செயல்பட வேண்டும். அவர்களிடம் நாம் மனிதாபிமானத்தடன் பார்க்க வேண்டும். வனப்பகுதியிலும் கூட சட்ட விரோத ஆக்கிரமிப்புகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
