ADDED : ஜூலை 05, 2025 11:01 PM

தங்கவயல்: “தங்கவயல் இந்திரா கேன்டீனில் உணவு சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கூடுதலாக உணவு வழங்குமாறு, மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்படும்,” என, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
ராபர்ட்சன்பேட்டையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் இந்திரா கேன்டீன் திறக்கப்பட்டுள்ளது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தலா 500 பேர் வீதம் உணவு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், கூட்டம் அதிகமாக உள்ளது.
நேற்று மதியம் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி தலைவர் இந்திரா காந்தி, நகராட்சி ஆணையர் மஞ்சுநாத், நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்களுடன் வரிசையில் நின்றனர். 10 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்கினர். பொதுமக்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர்.
எம்.எல்.ஏ., கூறுகையில், “இங்கு சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மேலும் கூடுதலாக உணவு வழங்குமாறு மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கப்படும். சுத்தம், சுகாதாரம் அவசியம் இருக்க வேண்டும். யாரையும் அலட்சியமாக கருதக்கூடாது,” என்றார்.
