/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்
/
எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்
எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்
எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு ஏழு நாட்கள் போலீஸ் காவல்
ADDED : பிப் 16, 2026 06:13 AM

பெங்களூரு: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், கைதான பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க, நீதிபதி அனுமதி வழங்கி உள்ளார்.
பெங்களூரு பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், 62, கடந்த 12ம் தேதி, பெங்களூரு விமான நிலையத்தில் சி.ஐ.டி., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய போது, இதயம் தொடர்பான பிரச்னை இருப்பது தெரிந்ததால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் இருந்து விலக்கு அளித்து, நீதிபதி சிவகுமார் உத்தரவிட்டார்.
ஜெயதேவா இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரியவந்ததால், கோரமங்களாவில் உள்ள நீதிபதி சிவகுமார் வீட்டில், பைரதி பசவராஜை, சி.ஐ.டி., போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரிக்க வேண்டி இருப்பதால் 14 நாட்கள் சி.ஐ.டி., காவலுக்கு அனுப்பும்படி, அரசு தரப்பு வக்கீல் அசோக் நாயக் கேட்டு கொண்டார்.
ஆனால் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வர அனுமதிக்கும்படி, பைரதி பசவராஜ் தரப்பு வக்கீல் கேட்டதற்கு, இதுதொடர்பாக விண்ணப்பம் சமர்பிக்கும்படி நீதிபதி கூறினார். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, சி.ஐ.டி., அலுவலகத்திற்கு பைரதி பசவராஜ் அழைத்து செல்லப்பட்டார்.
இந்நிலையில் பைரதி பசவராஜ் வீட்டிற்கு, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று சென்றார். எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கட்சி உங்களுடன் இருக்கிறது. கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அரசியல் சதியால் பைரதி பசவராஜ் கைது செய்யப்பட்டு உள்ளார். இது மாநில மக்களுக்கு நன்கு தெரியும். எனது தந்தை எடியூரப்பா மீதும் நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நாங்கள் சட்டரீதியாக எதிர்கொண்டோம்.
எடியூரப்பா முதல்வராக வேண்டும் என்பதற்காக, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய பைரதி பசவராஜ் ஓடி சென்று, சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்ததை நாங்கள் மறக்கவில்லை. அவரது ஆதரவாளர்கள் கவலைப்பட வேண்டாம். அனைவரும் பொறுமையாக இருங்கள். இது சோதனையான கால கட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.

