மது பங்காரப்பாவை மாற்றுங்கள் எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தல்
மது பங்காரப்பாவை மாற்றுங்கள் எம்.எல்.சி., விஸ்வநாத் வலியுறுத்தல்
ADDED : மே 25, 2026 10:30 PM

மைசூரு: ''கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, கல்வி நடைமுறையை பாழாக்கிவிட்டார். இந்த துறைக்கு திறமையானவர் வேண்டும்,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கல்வித்துறைக்கு மது பங்காரப்பா தகுதியானவர் அல்ல. ஒரு குழந்தையின் மன நிலையை புரிந்து கொண்டு, துறையை நிர்வகிக்கும் திறன் கொண்டவர், அமைச்சராக இருக்க வேண்டும்.
இன்றைய குழந்தை, நாளை இந்நாட்டின் குடிமகன். குழந்தைகளை சிறந்த குடிமக்களாக உருவாக்கும் பொறுப்பு, கல்வித்துறைக்கு உள்ளது.
கல்வி என்பது மிகப்பெரிய விஷயமாகும். தற்போது கல்வித்துறை அமைச்சருக்கு திறமை, ஒழுக்கநெறி என்பதே இல்லை. இத்தகைய நிலையில் பள்ளி கல்வி என்ன கதியாகும். மாநிலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை, கன்னடத்திலேயே கல்வி இருக்க வேண்டும்.
இது குறித்து, உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. அதுவரை சிறார்களுக்கு ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்பிக்க வேண்டும்.
ஆனால் இப்போது ஒன்றாம் வகுப்பில் இருந்தே, ஆங்கிலத்தில் கற்பிப்போம் என்கின்றனர். நமது கல்வித்துறை அமைச்சர், ஆறாம் வகுப்பில் இருந்தே, போட்டி தேர்வுகளுக்கு சிறார்களை தயாராக்குகிறாராம். இது நகைப்புக்குரியது. கர்நாடக பப்ளிக் பள்ளிகள் என்பது, கல்வி அமைச்சரின் பொய்யான கட்டுக்கதை. எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், முடிவு எடுக்கிறார்.
பள்ளி கல்வி மீது அக்கறை உள்ள, கன்னடம் மீது பற்றுள்ள ஒரு எம்.எல்.ஏ.,வை, கல்வித்துறை அமைச்சராக்க வேண்டும். மது பங்காரப்பாவை கல்வித்துறையில் இருந்து நீக்கும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் கேட்டுக்கொள்கிறேன். அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது, இவரை மாற்றி அவருக்கு வேறு துறையை தாருங்கள். கல்வி நடைமுறையை அவர் பாழாக்கி விட்டார்.
மது பங்காரப்பாவே, 'நான் பி.யு.சி., பெயில். எனக்கு வேறு துறை தாருங்கள்' என கேட்டுள்ளார். பி.யு.சி., பெயிலானவரை, இந்த மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக்கியது துரதிர்ஷ்டவசம். இது போன்று, வேறு எந்த மாநிலத்திலும் நடந்தது இல்லை. கல்வித்துறைக்கு நன்கு படித்தவரை, நல்லவரை நியமியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
