ADDED : மே 25, 2025 02:31 AM

பரப்பன அக்ரஹாரா: பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், உயர் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். மொபைல் போன், எலக்ட்ரிக் ஸ்டவ் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, பல ஆண்டுகளாகவே அவ்வப்போது சர்ச்சையில் சிக்குகிறது. கைதிகள் மொபைல் போன், போதைப்பொருள் பயன்படுத்தியது, வி.ஐ.பி., கைதிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
உயர் அதிகாரிகளும், சிறையில் சோதனை நடத்துகின்றனர். ஒவ்வொரு முறை சோதனை நடத்தும்போது, மொபைல் போன்கள், சிம் கார்டுகள், கத்தி என, பல பொருட்கள் கிடைக்கின்றன.
கடந்த மாதம் பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகளுக்கு இடையே அடிதடி நடந்தது. இந்த சம்பவத்தில் கைதி ஒருவரின் கை முறிந்தது. ஒரு வழக்கில் கைதாகி, விசாரணை கைதியாக சிறையில் உள்ள ஒரு பெண், அறையை மாற்ற சென்ற மகளிர் ஊழியரின் கையை கடித்த சம்பவமும் நடந்தது. சிறையில் இருந்தபடியே தொழிலதிபர்களை மிரட்டுவதும் நடக்கிறது.
சிறையில் சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும் நோக்கில், எலக்ட்ரானிக் சிட்டி துணை மண்டல போலீசார், நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது ஒரு மொபைல் போன், எலக்ட்ரிக் ஸ்டவ், மொபைல் சார்ஜர், 16,000 ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
