/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவி விவகாரத்தில் மடாதிபதிகள்... தலையீடு! சித்தராமையா, சிவகுமாருக்கு போட்டி போட்டு ஆதரவு
/
முதல்வர் பதவி விவகாரத்தில் மடாதிபதிகள்... தலையீடு! சித்தராமையா, சிவகுமாருக்கு போட்டி போட்டு ஆதரவு
முதல்வர் பதவி விவகாரத்தில் மடாதிபதிகள்... தலையீடு! சித்தராமையா, சிவகுமாருக்கு போட்டி போட்டு ஆதரவு
முதல்வர் பதவி விவகாரத்தில் மடாதிபதிகள்... தலையீடு! சித்தராமையா, சிவகுமாருக்கு போட்டி போட்டு ஆதரவு
ADDED : நவ 28, 2025 05:45 AM

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தில், மடாதிபதிகள் தலையிட்டுள்ளனர். சித்தராமையா, சிவகுமாருக்கு போட்டி போட்டு ஆதரவு தெரிவிக்கின்றனர். 'சோனியா, ராகுல் முன்னிலையில் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்' என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இன்றோ, நாளையோ முதல்வரும், துணை முதல்வரும் டில்லி செல்லலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. 'ஆளுக்கு தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என, மேலிடம் போட்ட ஒப்பந்தத்தை கடைப்பிடிக்கவில்லை என்று சித்தராமையா மீது, சிவகுமார் தரப்பு கடுப்பில் உள்ளது.
* சந்தோஷம்
'சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க, காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, சிவகுமார் சார்ந்த ஒக்கலிக சமூகத்தின், பிரபல மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி நேற்று முன்தினம் கூறினார். இதையடுத்து, சிவகுமாருக்கு மேலும் சில மடாதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
துமகூரு பட்டநாயக்கனஹள்ளியில் உள்ள குருகுந்தா பிரம்மேஸ்வர சுவாமி மடத்தின் மடாதிபதி நஞ்சவதுாத சுவாமிகள் நேற்று கூறியதாவது:
சித்தராமையா நல்லாட்சி கொடுக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், காங்கிரஸ் மேலிடம் கொடுத்த வாக்குறுதியின்படி, இரண்டரை ஆண்டுகளுக்கு பின், சிவகுமார் முதல்வர் பதவியை கேட்கிறார். இதில் என்ன தவறு உள்ளது.
இதற்கு முன்பு சித்தராமையா, 5 ஆண்டுகள் முழுமையாக பதவியில் இருந்தார். அவருக்கு சிவகுமார் முழு ஆதரவு கொடுத்தார். இப்போது, சித்தராமையா பதவியை சிவகுமாருக்கு விட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெலகாவி மடிவாளேஸ்வரா மடத்தின் மடாதிபதி வீரேஸ்வர சுவாமி கூறுகையில், ''சித்தராமையாவும், சிவகுமாரும் இரண்டரை ஆண்டுகள் கைகோர்த்து செயல்பட்டனர். முதல்வர் பதவியால் இருவருக்கும் இடையில் பிரச்னை வந்து விடக்கூடாது. உங்கள் சண்டையால் கட்சிக்கு சேதம் ஏற்படுத்தி விடாதீர்கள். சிவகுமார் முதல்வர் ஆக, சித்தராமையா ஆதரவளிக்க வேண்டும். சிவகுமார் முதல்வராகா விட்டால், அரசு கவிழ்வது உறுதி,'' என்றார்.
இதற்கு போட்டியாக, சித்தராமையாவுக்கும் அவர் சார்ந்த குருபா சமூக ஆதரவு கிடைத்து உள்ளது. காகினாலே மடத்தின் மடாதிபதி நிரஞ்சனாந்தபுரி சுவாமி, வால்மீகி, போவி, மடிவாளா, கும்பாரா உட்பட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த, மடாதிபதிகள் ஆதரவும் கிடைத்து உள்ளது.
இவர்கள், 'எந்த காரணத்திற்கும் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற கூடாது; அப்படி செய்தால் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவோம்' என, எச்சரித்து உள்ளனர்.
அதே நேரம், மடாதிபதிகள் அரசியலில் தலையிடுவதற்கு எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. 'மடாதிபதிகள் ஆன்மிக பணியில் மட்டுமே ஈடுபட வேண்டும்; அரசியலில் மூக்கை நுழைக்கக் கூடாது' என்று, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராஜண்ணா கண்டித்துள்ளார்.
* நிச்சயம் செல்வேன்
இந்நிலையில், உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள, டில்லியில் இருந்து நேற்று முன்தினம் பெங்களூரு வந்த மல்லிகார்ஜுன கார்கே, நேற்று காலை மீண்டும் டில்லி கிளம்பினார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ''நான் டில்லி சென்ற பின், நான்கு, ஐந்து முக்கிய தலைவர்களுடன் விவாதிப்பேன். அதன்பின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சித்தராமையா, சிவகுமாரை டில்லிக்கு அழைத்து விவாதித்து பிரச்னையை தீர்ப்போம்,'' என்றார்.
இதன்படி நேற்று டில்லி சென்ற கார்கே, ராகுல், வேணுகோபால், ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்றோ, நாளையோ முதல்வரும், துணை முதல்வரும் டில்லி செல்லலாம் என்றும் கூறப்படுகிறது.
=======

